பக்கம் எண் :

சீறாப்புராணம்

564


முதற்பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு பார்த்த அபூபக்கர் சித்தீகுறலியல்லாகு அன்கு அவர்கள் இந்தப் பிலாலென்பவர் தாம் சகித்தற்கரிய வருத்தத்தைச் சகித்தும் தமது நிச்சயத்தை மறுத்திலரென்று சொல்லித் தங்களின் மனசின்கண் மதிப்பிட்டு அந்த இபுனுகலபென்பவன் சொல்லிய திரவியத்தைக் கொண்டு அடிமையான அப்பிலாலை அடிமையை விட்டு மீட்டி பெறுதற் கரிதான நமது உரிமையை யுடையவனென்று சொன்னார்கள்.

 

1488. மன்னிய புகழபூ பக்கர் மாசிலா

     நன்னிலை யவன்றனை யுரிமை நாட்டிய

     பின்னரும் பகைப்பிணி பிணிப்பு நீக்கியே

     தன்னரு ளொடும்பெருந் தீனைத் தாங்கினார்.

149

      (இ-ள்) கீர்த்தி பொருந்திய அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு குற்றமற்ற நல்ல நிலைமையை யுடையவரான அந்தப் பிலாலென்பவரை யுரிமையாக நிறுத்திய பிற்பாடும் அவர் விரோதமாகிய நோயினது கட்டைத் தவிர்த்துத் தமது கிருபையோடும் பெரிய தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தைத் தாங்கினார்.

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

1489. திருநெறித் தீனுள் ளோரைத் தீனெறி மாறி னோர்கண்

     மருளுடை மனத்த ராகி முரண்மறா திருக்கு நாளில்

     விரிகதி ரிலங்கிச் சேரார் மெய்நிணம் பருகும் வெள்வேற்

     கரதல அம்சா வென்னுங் காளைகா னிடத்திற் புக்கார்.

150

      (இ-ள்) தெய்வீகத்தைக் கொண்ட தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திலுள்ளவர்களை அத்தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை விட்டும் நீங்கினவர்களான காபிர்கள் மயக்கத்தைப் பொருந்திய மனத்தையுடையவர்களாகி விரோதத்தை மறுக்காது அவ்விதம் இருக்கின்ற நாட்களில் விரிந்த கிரணங்கள் பிரகாசிக்கப் பெற்றுச் சத்துராதிகளது சரீரத்தின் கண்ணுள்ள கொழுப்பை அருந்தா நிற்கும் வெள்ளிய வேலாயுதத்தைத் தாங்கிய கைத்தலத்தை யுடைய ஹம்சாவென்று சொல்லும் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சிறிய தந்தையர்களி லொருவராகிய இளம்பருவத்தையுடையவர் காட்டின்கண் போய்ப் புகுந்தார்.

 

1490. மெல்லிலைக் கானத் தேகி விலங்கினம் வேலிற் றாக்கிப்

     பல்லருங் குழுமி யார்ப்பப் பரிவொடும் வேட்டை யாடி

     யொல்லையி லடவி நீந்தி யுள்ளகம் பூரித் தோங்கச்

     செல்லுறை புரிசை வேலித் திருநகர் சாருங் காலை.

151