பக்கம் எண் :

சீறாப்புராணம்

577


முதற்பாகம்
 

செய்கைகளைச் செய்தாலும் அத்துன்பமானது அந்நபிகள் பெருமானவர்க ளிடத்திற் சம்பவியாது; ஆதலால் குற்றமுற்றதான உமது மனதின்கண் பெருகா நிற்கும் துன்பத்தை யொழிந்து நீர் போகவேண்டு மென்று சொல்லி அவரின் வார்த்தைகளை மறுத்துச் சில வார்த்தைகள் சொல்லும்.

 

1526. பரிக ரித்திரட் படையொடு நிலத்தினிற் பரப்பி

     யரச ராயிர ரிகலினின் மனவலிக் கணுவே

     திரம தாயினு முகம்மதி னிடத்தினிற் சேற

     லுரம தன்றுநி னுரனது முரனல வுரவோய்.

24

      (இ-ள்) வலிமையை யுடையவரான உமறு கத்தாபே! இந்தப் பூமியின்கண் கூட்டமாகிய சேனைகளுடன் குதிரைகளையும் யானைகளையும் பரவச் செய்து அரசர்கள் ஆயிரம் பேர் உம்மோடு பொருதினால் உமது இருதயவல்லமைக்கு அப்பொருதுதல் அணுப்போன்ற வலிமையே யானாலும் உமக்கு அந்நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல் மவர்களிடத்தில் சென்று பொருத வல்லமை யில்லை உம்முடைய வல்லமையும் ஒரு வல்லமையல்ல.

 

1527. படைக்க லத்திலொன் றெடுத்தறி யாப்பகுத் தறியா

     விடைக்குண் மெல்லிய னிளமையன் றனியவன் வினையேன்

     புடைக்குள் வீரத்தை விளைத்தியேன் முகம்மதின் புகழை

     யுடைக்கு நின்வலி யென்பதை யறிவனென் றுரைத்த.

25

      (இ-ள்) அன்றியும், நான் யுத்தத்திற்குரிய ஆயுதங்களில் ஒன்றையாவது எடுத்தறியாத பிரித்துணராக் காளை மாட்டுளுள் மெலிவையுடையவன். மேலும் இளமையையுடையவன் ஏகனானவன். வினையை யுடையவனாகிய எனது பக்கத்துள் உமது வீரத்தை விளைப்பீரே யானால் நான் உம்முடைய வல்லமை அந்த முகம்மதின் கீர்த்தியைத் தகர்க்கு மென்பதை உணர்வே னென்று சொல்லிற்று.

 

1528. நந்தி யிவ்வுரை பகர்ந்திட நரபதி யுமறு

     கந்த டர்த்தெறி களிறென விருவிழிக் கனல்கள்

     சிந்தி டக்கரும் பிருகுடி நுதல்செலச் சினந்து

     மந்தி ரக்கதிர் வாளெடுத் தசைத்தெதிர் வந்தார்.

26

      (இ-ள்) அந்தக் காளை மாடானது இந்த வார்த்தைகளைச் சொல்ல மனிதாதிபரான உமறென்பவர் கட்டுத்தறியை அடர்த்து வீசா நிற்கும் யானையைப் போல இரண்டு கண்களிலுமுள்ள நெருப்புகள் சொரியும் வண்ணம் கரிய புருவங்கள் நெற்றியிற் செல்லும்படி கோபித்து பிரகாசத்தை யுடைய மந்திரவாளைக் கையில் தூக்கியசைத்து அதன் முன்னாக வந்தார்.