பக்கம் எண் :

சீறாப்புராணம்

578


முதற்பாகம்
 

1529. எதிர்த்து நின்றற வீசினர் வீசலு மிடபங்

     குதித்துத் தம்வலப் பாரிச மாகின குறுகி

     மதித்து வீசலு மிடப்புற மானது மறுத்தும்

     பதித்து வீசலும் பிற்புற மானது பறந்தே.

27

      (இ-ள்) அவ்விதம் வந்த அவர் அக் காளைமாட்டை எதிர்த்து நின்று அதின் சரீரமானது அற்றுப் போகும் வண்ணம் வாளினால் வீசினார். அவ்வாறு வீசின மாத்திரத்தில் அக் காளை மாடானது தான் நின்றிருந்த இடத்தை விட்டும் சாடித் தனது வலப்பக்கமாகினது மறுத்தும் மனசின்கண் மதிப்பிட்டு அணுகி வீசலும் இடப்பக்க மாயினது. மறுபடியும் அழுத்தி வீசலும் கிளம்பிப் பின்புறமாயினது.

 

1530. நான்கு திக்கினுங் குதித்துமுன் னணித்துற நடக்குந்

     தேன்கு தித்தசெந் தொடைப்புய ருரத்தொடுஞ் சினந்து

     வான்கு தித்தமின் னெனக்கர வாளொளி மயங்கத்

     தான்கு தித்தனர் துரத்தினர் திரிந்தனர் சாரி.

28

      (இ-ள்) அவ்வாறு அக் காளைமாடானது நான்கு திக்குகளிலும் சாடி முன்னர்ச் சமீபமாய்ச் செல்லும். அதைப் பார்த்துத் தேனானது குதிக்கப் பெற்ற செவ்விய மலர்மாலை யணிந்த தோள்களையுடையவரான உமறென்பவர் வலிமையுடன் கோபித்து வானிலிருந்து பாயா நிற்கும் மின்னலைப் போன்ற தமது கையின் கண்ணுள்ள வாளினது பிரகாசமானது மயங்கும் வண்ணம் சாடித் துரத்தி வலசாரி இடசாரி முன்சாரி பின்சாரியாக நான்கெல்லைகளிலும் திரிந்தார்.

 

1531. எட்டி யொட்டுவர் வெட்டுவர் வெட்டலு மிடபங்

     கிட்டி டாதக லாதுடல் கிழிபட வெதிர்ந்து

     முட்டித் தாக்குற வருவபோ லடிக்கடி முடுகுந்

     தொட்டி டாதொழி யாதருஞ் சூறையிற் சுழலும்.

29

      (இ-ள்) அன்றியும், தாவிப் பொருந்தி வெட்டுவார் அவ்விதம் வெட்டின மாத்திரத்தில் அந்தக் காளைமாடானது அந்த வெட்டுக்கு அகப்படாமலும் அவ்விடத்தை விட்டு நீங்காமலும் எதிர்த்து அவரின் சரீரமானது கிழிபடும் வண்ணம் முட்டித் தள்ளும்படி வருவதைப் போல அடிக்கடி நெருங்கும் மேலும் அவரைத் தீண்டாமலும் அவரைவிட்டு மொழியாமலும் அரிய சூறைக் காற்றைப் போலச் சூழலா நிற்கும்.

 

1532. அடுத்து முன்னெதிர்த் திருவளை மருப்பினை யசைக்கும்

     வெடித்த வாலிரு புறத்தினு மடிக்கடி விசைக்கும்

     படித்த லத்துகள் விசும்புறக் குளம்பினிற் பறிக்கு

     மிடித்த வானுறு மேறென வதிர்ந்திடு மிடபம்.

30