பக்கம் எண் :

சீறாப்புராணம்

579


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், அந்தக் காளை மாடானது அவ்வுமறென்பவரைச் சமீபித்து அவரின் முன்னாக எதிர்த்து வளைந்த இரண்டு கொம்புகளையும் அசையும்படி செய்யும் பிளவுற்ற வாலினால் அடிக்கடி இருபக்கங்களிலும் அடிக்கும் பூமியின் கண்ணுள்ள துகளானது ஆகாயத்திற் பொருந்தும் வண்ணம் காற்களினது குளம்புகளினால் பூமியைப் பறியச் செய்யும் ஆகாயத்தின்கண் இடியா நிற்கும் இடியைப் போல ஒலிக்கும்.

 

1533. கண்ணி னுக்கெதிர் தோன்றிடுங் காணொணா தகலும்

     விண்ணி னிற்பறந் திடுந்திசை விசும்பெலாந் திரியு

     மெண்ணு முன்னுமுன் வந்திடுங் கான்மடித் தெதிரே

     மண்ணி னிற்படுத் திடுங்குனிந் தெழுந்துவா னிமிர்க்கும்.

31

      (இ-ள்) அன்றியும், கண்களுக்கு எதிராகத் தெரியும் காணொண்ணாது அவ்விடத்தை விட்டும் அகன்று செல்லும் ஆகாயத்தின்கண் பறக்கும். எண்டிசைகளிலும் அந்தர முழுவதிலும் திரியும் நினைப்பதற்கு முன்னும் முன்னராக வரும் நான்கு கால்களையும் மடித்துக் கொண்டு எதிராகப் பூமியின்கண் படுக்கும் குனிந்து எழும்பி வாலை நிமிரும் வண்ணம் செய்யும்.

 

1534. இடப மிவ்வணந் திரிதர விருவிழி சிவந்து

     தொடரு வார்சுடர் வாட்கொடு தாக்குவர் துரத்தி

     யடரு வார்மறிப் பார்திகைப் பாரடுத் தடுத்துக்

     கடுவி சைகொழுங் காறளர்ந் திதழினைக் கறிப்பார்.

32

      (இ-ள்) அந்தக் காளை மாடானது இந்தப் படியாகத் திரிய உமறுகத்தா பென்பவர் இரண்டு கண்களும் சிவப்புற்று அம்மாட்டைப் பின்பற்றிப் பிரகாசத்தை யுடைய வாளாயுதத்தைக் கொண்டு தாக்குவார். ஒட்டிக் கொண்டு நெருங்குவார் எதிர்த்துத் தடுப்பார். மயங்குவார். மீண்டும் மீண்டும் கடிய விசையைக் கொண்ட தமது இரு கால்களும் தளர்ச்சியுற்று உதடுகளைக் கடிப்பார்.

 

1535. கரத்தை நோக்குவர் வாளினை நோக்குவர் கடுப்பி

     னெருத்தை நோக்குவர் வீரத்தை நோக்குவ ரெதிராத்

     தரத்தை நோக்குவ ரவையினி லபூசகு லுடனே

     யுரைத்த வார்த்தையை நோக்குவர் நோக்குவ ருளத்தை.

33

      (இ-ள்) அன்றியும், விரைவாய்த் தமது கையைப் பார்ப்பார். வாளைப் பார்ப்பார். அந்தக் காளை மாட்டைப் பார்ப்பார். தமது வீரத்தைப் பார்ப்பார். அக்காளை மாட்டை எதிர்த்து ஜெயிக்காத ஒரு தன்மையைப் பார்ப்பார். அபூஜகிலோடும் சபையில் பேசின வார்த்தைகளைப் பார்ப்பார். தமது இருதயத்தைப் பார்ப்பார்.