பக்கம் எண் :

சீறாப்புராணம்

583


முதற்பாகம்
 

சத்தியத்தை யுடைய வேதத்தினுள்ளும் வலிமையை யுடையவர்களின் வார்த்தைகளி னுள்ளும் மனமானது தெளியும் வண்ணம் கேள்வியுற்றதில்லை. அன்றியும், என்னுடைய கண்களினால் பார்த்தது யாவர்களும் பார்க்க முடியாத அற்புதமென்று சொன்னார்.

 

1546. சரத்திடை விடையொன் றங்ஙன் றனித்துநின் றதிர்ந்தென் பேரை

     யுரைத்தது விளிப்பக் கேட்டே னுணர்ந்தியா ரென்ன நேர்ந்தேன்

     விரைத்தலி னெங்கே கின்றீ ரெனவிறன் முகம்ம துற்ற

     துரைத்தனக் குறும்பு தீர்ப்பத் துணிந்தனென் றுரைத்தன் மாதோ.

44

      (இ-ள்) யான் போன பாதையின் கண்ணுள்ள அவ்விடத்தில் ஒரு காளை மாடானது ஏகமாக நின்று ஒலித்து என் நாமத்தைக் கூறி அது என்னைக் கூப்பிடும் வண்ணம் எனது காதுகளினாற் கேள்வியுற்றதை மனசின்கண் தெரிந்து நம்மைக் கூப்பிடுகிறவர் யாவரென்று நேர்ந்து பார்த்தேன். அப்போது அந்தக் காளைமாடானது நீவிர் விரைவோடும் எங்கே செல்லுகின்றீரென்று கேட்க, வலிமையையுடைய முகம்மதென்பவன் பொருந்திய அதிகாரத்தை யுடைய பொல்லாங்கை நீக்கும் பொருட்டு நிச்சயித்துச் செல்லுகின்றேனென்று சொன்னேன்.

 

1547. இன்றெனை யடர்த்தோர் செவ்வி யியன்முகம் மதுவை வென்றோ

     ரென்றதற் கெதிர்ந்து கைவா ளெறிந்தன னுரத்திற் றாக்கி

     நின்றனன் மறித்தே னெந்த நிலத்தினுந் தொடர்ந்து காலிற்

     சென்றனன் றவித்தே னென்னாற் செய்ததொன் றில்லை யன்றே.

45

      (இ-ள்) அதைக் கேட்ட அந்தக் காளை மாடானது இன்றையத் தினம் என்னைச் சண்டை செய்து ஜெயித்தவர்கள் அழகிய ஒழுங்கை யுடைய அந்த முகம்மதென்பவர்களை ஜெயித்தவர்கள் என்று சொன்னதற்காய் யான் எதிர்த்து எனது கையிலிருந்த வாளாயுதத்தினால் வீசி வலிமையோடும் அம்மாட்டைத் தாக்கி நின்று தடுத்து எந்நிலங்களிலும் எனது காற்களினால் நடந்துப் பின்பற்றித் தவிப்படைந்தேன். ஆனால் இவ்விதமெல்லாம் சிரமப்பட்டும் அம்மாட்டை என்னாற் செய்தது யாதொன்றுமில்லை.

 

1548. காற்றெனப் பறக்கு மூழிக் கனலெனச் சீறுங் கொல்லுங்

     கூற்றென வெதிருஞ் செல்லிற் குலவரை யனைத்துஞ் சுற்றுந்

     தோற்றிடா விசும்பிற் றாவுஞ் சுழலுமட் டிகிரி யென்னச்

     சீற்றமுற் றடுத்துப் பின்னு முன்னுமே திரியு மன்றே.

46