பக்கம் எண் :

சீறாப்புராணம்

586


முதற்பாகம்
 

தோற்றப்பெற்ற மெய்மையான செய்தியைப் பொய்மையென்று சொல்லுவது யாவர்களுக்கும் கட்டளையல்ல, சந்தேகப் படுவதைச் சொல்லலாகாது. ஆச்சரியமானவற்றை மறைக்கலாகாது. இஃது இந்தப் பூலோகத்தினது சுபாவமென்று இவைகளைச் சொல்லி விட்டுத் தமது திசையை நோக்கிச் சென்றார்.

 

1555. அற்றைநாட் கழிந்த பிற்றை யடலும றெழுந்து செவ்வேற்

     கொற்றவ ரப்துல் லாதங் குமரரைக் கோறல் வேண்டி

     முற்றிய மனத்தி னோடு முரண்மதக் கரியை நேரா

     வெற்றிவெண் கதிர்வாட் டாங்கி நடந்தனர் விளைவ தோரார்.

53

      (இ-ள்) அவ்விதம் சென்ற உண்டாகா நிற்கும் காரணத்தையறியாதவரான வலிமையையுடைய உமறென்பவர் அன்றையதினம் போய் மறுநாள் எழும்பிச் சிவந்த வேலாயுதத்தையுடைய அரசராகிய அப்துல்லா வென்பவரின் புதல்வரான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைக் கொலை செய்ய வேண்டி முதிர்ந்த மனசினுடன் அமையாமையைப் பெற்ற மதத்தைக் கொண்ட யானையை யொத்து விஜயத்தை யுடைய வெள்ளிய பிரகாசம் பொருந்திய வாளாயுதத்தைக் கையில் தாங்கிக் கொண்டு அந்நபிகள் பெருமானவர்கள் இருக்கும் திசையை நோக்கி நடந்து சென்றார்.

 

1556. நடுவுறு மனத்தார் நீதி நான்மறை தெரிந்த நாவார்

     படிறுரை பகராச் செவ்வி யறபிகள் பல்லர் கூடி

     யுடனொரு வழக்கைத் தேற்றித் தேறிலா தொளிரும் செம்பொற்

     கொடுமுடி விசும்பு தூண்டுங் கோயிலின் வாயில் புக்கார்.

54

      (இ-ள்) அப்போது நீதியானது பொருந்திய மனத்தையுடையவர்களும் சத்தியத்தையுடைய நான்கு வேதங்களையுமுணர்ந்த நாவை யுடையவர்களுமாகிய பொய்யான வார்த்தைகளைச் சொல்லாத அழகிய அறபிகளனேகர் ஒருவரோடொருவர் சேர்ந்து ஒரு நியாயத்தைத் தீர்த்தும் தீராதுப் பிரகாசிக்கின்ற சிவந்த பொன்னினாற் செய்த சிகரமானது ஆகாயத்தைத் தூண்டா நிற்கும் ஒரு கோயிலினது வாயலின்கண் போய் நுழைந்தார்கள்.

 

1557. ஆலயம் புகுந்து செந்தே னலங்கறோய் சுவாகு பூம்பொற்

     காலிணை யிறைஞ்சி யேத்திக் கைமுகிழ்த் திருந்து நோக்கி

     மேலவ வெங்கட் குற்ற வழக்கினை விளங்கக் கேட்டுச்

     சாலவுந் தீர்த லாகச் சாற்றுதல் வேண்டு மென்றார்.

55