பக்கம் எண் :

சீறாப்புராணம்

587


முதற்பாகம்
 

(இ-ள்) அவ்வாறு அவர்க ளியாவர்களும் அந்தக் கோயிலின்கண் போய் நுழைந்து சிவந்த தேனையுடைய மலர் மாலைகளினால் தோயப் பெற்ற சுவாகென்று சொல்லும் விக்கிரகத்தின் தாமரைப் புஷ்பம் போன்ற அழகிய இருபாதங்களிலும் வணங்கித் துதித்து இரண்டு கைகளையும் குவித்த அவ்விடத்தில் தங்கியிருந்து அவ்விக்கரகத்தைப் பார்த்து மேன்மை யுடைய சுவாமியே! எங்களிற் பொருந்திய நியாயத்தை விளங்கும் வண்ணம் கேள்வியுற்று மிகவும் நிசமாகத் தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்று கேட்டார்கள்.

 

1558. தோட்டலர் நாற்றும் வாயிற் சுவாகெனும் புத்துத் தன்னை

     வாட்டிறத் தறபி வீரர் மகிழ்ந்தெமர் வழக்கி னுட்பப்

     பூட்டறுத் துரைக்க வேண்டு மெனப்புகழ்ந் திருக்குங் காலைத்

     தீட்டிய கதிர்வேற் செங்கைத் திறலும றவணின் வந்தார்.

56

     (இ-ள்) வாளினது வல்லமையை யுடைய அறபிகளான அந்த வீரர்கள் அவ்வாறு மனமகிழ்ச்சி யடைந்து எங்களுடைய நியாயத்தின் நுட்பத்தினது கொழுவுதலை யறும்படி செய்துத் தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்று இதழ்களை யுடைய மலர் மாலைகளைத் தூக்கிய வாயலினது அந்தச் சுவாகென்று சொல்லும் விக்கிரகத்தைத் துதித்துக் கொண்டு இருக்கின்ற சமயத்தில் தீட்டப்பெற்ற பிரகாசத்தைக் கொண்ட வேலாயுதத்தை யுடைய சிவந்த கையினது வல்லமை தங்கிய உமறுகத்தா பென்பவர் அங்கு வந்து சேர்ந்தார்.

 

1559. வகையறா வழக்குத் தீர்த்துத் தருகென மன்னர் சூழ்ந்த

     தொகையினி லுமறென் றோதுந் தோன்றலு மிருப்பக் கண்டு

     திகைதெரி விளக்க மாகச் சுவாகெனுந் தெய்வம் வாய்விண்

     டகமகிழ்ந் தவையோர் கேட்ப நன்மொழி யாய்ந்து சொல்லும்.

57

      (இ-ள்) அப்போது சுவாகென்று சொல்லும் அவ்விக்கிரகமானது காரண மின்னதென்று மனசின்கண் அறாத வழக்கைத் தீர்த்துத் தருவாயாக வென்று அரசரான அறபிகள் வளைந்த கூட்டத்தில் உமறென்று சொல்லும் மன்னவரும் இருக்கும்படி பார்த்து எண்டிசைகளிலும் தெரியும் வண்ணம் விளக்கமாகத் தனது வாயைத் திறந்து மனமகிழ்ச்சி யடைந்து அச்சபையோர்க ளெல்லாவரும் கேட்கும்படி நல்ல வார்த்தைகளை ஆராய்ந்து சொல்லும்.

 

1560. மதிகதி ரவனி காயம் வானமற் றெவையும் போற்றும்

     புதியவ னுண்மைத் தூதர் நபிகளிற் புகழின் மிக்கோர்

     பதியிரண் டினுக்கு மேலோர் படைப்புள வெவைக்கு முன்னோர்

     கதிதருங் காட்சி பெற்றோர் கபீபெனு முகம்ம தென்போர்.

58