பக்கம் எண் :

சீறாப்புராணம்

590


முதற்பாகம்
 

(இ-ள்) அவர் அவ்வாறு வரவே அழகிய மயிலான பாத்திமா அவர்களும் அவர்களின் நாயகராகிய செவ்வையான ஒழுங்கையுடைய சயீதென்பவர்களும் தேனானது நெகிழப் பெற்ற வாசனை யதிகரியா நிற்கும் மலர்மாலை யணிந்த திண்ணிய புயங்களையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் கலிமாவைச் சொல்லி, குருவின் முறைமையையுடைய ஹப்பாபென்று சொல்லும் குரிசிலானவர்களின் முன்னாகத் தங்கியிருந்து இன்பமிகுத்த புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது உண்மைகளைக் கேட்டு உவகையடைந்திருக்கும் சமயத்தில்.

 

1567. எறுழ்வலித் தடக்கை வெற்றி யெழிலும றிவணி னம்பாற்

     குறுகின ரென்னச் செல்வக் குலக்கொடி பாத்தி மாவும்

     பெறுகதி சகீதுந் தம்மிற் பேதுற்று நெறிகப் பாபை

     மறைபட விருத்திச் செவ்வி மனைத்திரு முன்றி னின்றார்.

65

      (இ-ள்) மிகுத்த வல்லமை தங்கிய பெரிய கைகளைக் கொண்ட விஜயத்தையுடைய அழகிய உமறு கத்தாபென்பவர் இங்கு நம்மிடத்தில் குறுகினாரென்று செல்வத்தையுடைய தமது குலத்திற்குக் கொடிபோலும் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களும் கதியைப் பெற்ற சயீது றலியல்லாகு அன்கு அவர்களும் தங்களில் மதிமயங்கி சன்மார்க்கத்தையுடைய ஹப்பாபு றலியல்லாகு அன்கு அவர்களை மறையும் வண்ணம் இருக்கும்படி செய்து தாங்கள் அழகிய செல்வத்தையுடைய வீட்டினது முற்றத்தில் வந்து நின்றார்கள்.

 

1568. மென்னபிக் கீமான் கொண்டோ ரிவரெனும் வெறுப்பி னாலும்

     பன்னுமா மறைச்சொ லில்லுட் பகர்ந்ததோ ரையத்தாலு

     மன்னிய சீல நீக்கி மைத்துனர் சகீதைக் கோபித்

     தின்னுயிர் தடிவே னென்ன விருவிழி கனல நின்றார்.

66

      (இ-ள்) அப்போது உமறு கத்தா பென்பவர் இவ்விருவர்களும் மேன்மையையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு ஈமான் கொண்டவர்களென்று சொல்லும் சினத்தினாலும் வீட்டினகம் புகழா நிற்கும் மகத்தான வேதவாக்கியமோதிய ஒரு சந்தேகத்தினாலும் பொருந்திய தமது சுபாவத்தை யொழித்து இரண்டு கண்களிலும் நெருப்பானது எரியும் வண்ணம் தமது மைத்துனரான சயீது றலியல்லாகு அன்கு அவர்களைக் கோபித்து இனிமை தங்கிய உம்முடைய ஜீவனைக் குறையச் செய்வேனென்று சொல்லி நின்றார்.