பக்கம் எண் :

சீறாப்புராணம்

593


முதற்பாகம்
 

பொருந்திய தாமரைப் புஷ்பங்களையுடைய ஒரு தடாகத்தை நெருங்கிக் குளிர்ச்சியுற்ற அத்தடாகத்தினது நீரின்கண் ஸ்நானஞ் செய்தார்.

 

1575. புனைந்தமென் றுகிலை நீத்து வேறொரு புதிய தூசும்

     வனைந்தகம் புனித மாக்கி வாவியங் கரையை நீக்கிச்

     சினந்தங்குங் கதிர்வேற் கண்ணா டிருமனை புகுந்து நீவிர்

     நினைந்தவை முடித்தே னியானு நிகழ்த்திய தருள்க வென்றார்.

73

      (இ-ள்) அவ்விதம் ஸ்நானஞ் செய்த அவர் தாம் முன்னர் தரித்திருந்த மெல்லிய வஸ்திரத்தை யொழித்து வேறேயொரு நூதனமாகிய வஸ்திரத்தையுந் தரித்து மனசைப் பரிசுத்தமாகச் செய்து அந்த அழகிய குளக்கரையை நீத்துக் கோபமானது தங்கா நிற்கும் பிரகாசத்தையுடைய வேலாயுதம் போலும் கண்களையுடையவர்களான பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களின் தெய்வீகம் பொருந்திய வீட்டின்கண் நுழைந்து நீவிர் எண்ணியவைகளைச் செய்து முடித்தேன். யானும் கேட்டதைத் தாருமென்று கேட்டார்.

 

1576. சுந்தரப் புதுநீ ராடித் தூசணிந் திகலி லாது

     வந்தபின் னோனை நோக்கி முகம்மதே யுண்மைத் தூதென்

     றந்தமி லாதி சொற்ற ஆயத்தும் பொருளுந் தீஞ்சொற்

     சிந்துபத் திரத்தை யீந்தார் சிற்றிடைப் பெரிய கண்ணார்.

74

      (இ-ள்) அவ்வாறு கேட்கவே சிறிய இடையையும் பெரிய கண்களையு முடையவரான பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்கள் அழகிய புதிய ஜலத்தில் ஸ்நானஞ் செய்து வஸ்திரமணிந்து விரோதமில்லாது வரப்பெற்ற தங்களின் தம்பியாகிய உமறென்பவரைப் பார்த்து நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களே சத்தியத்தையுடைய றசூலென்று முடிவற்றவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவானவன் சொன்ன ஆயத்தும் அதின் அர்த்தமுமாகிய இனிய சொல்லானது சிந்தா நிற்கும் ஒரு காகிதத்தை எடுத்துக் கொடுத்தார்கள்.

 

1577. பத்திரங் கரத்தில் வாங்கிப் பார்த்திவ ருமறு கத்தாப்

     சித்திர வரிய லொன்றைத் தெளிவுறத் தேர்ந்து வாசித்

     தித்தகைக் குரிய ரியாவ ரெவர்மொழி யிதுகொ லென்னப்

     புத்தியுட் களித்துத் தேறிப் பொருவிலா வுவகை பூத்தார்.

75

      (இ-ள்) பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்கள் அவ்வாறு கொடுத்த கடிதத்தை அரசரான உமறுகத்தா பென்பவர் தமது கைகளினால் வாங்கி அதிலிருந்த அழகிய வரிகளில் ஒரு வரியைத்