பக்கம் எண் :

சீறாப்புராணம்

61


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், பெட்டை யானை போலும் நடையையும் மயிலினது சாயலையொத்த சாயலையுமுடைய பீவி ஹவ்வா அலைகிஸ்ஸலாமவர்களும் விஜயத்தைப் பெற்ற வல்லமையையுடைய அரசராகிய நபி ஆத மலைகிஸ்ஸலா மவர்களும், பரிமளத்தைக் கொண்ட புஷ்பங்களையுடைய கொடியையும் அழகிய கற்பகச் சோலையையும் போல ஆசையினது அமிர்த போகத்தை இனிமையுடனுண்டு சந்தோஷித்து ஓங்கி அழகுபொருந்திய இன்பநீரையுடைய சமுத்திரத்திற்ககம் அழுந்தினார்கள்.

 

123. துறக்கநன் னகரிற் சேர்ந்து சுகமனு பவிக்கு மாத

    மறக்கரும் பொருளே வேதம் வருமுறைக் குரிய கோவே

    பெறற்கருஞ் சுவன வானோ ரனைவரும் பெரிது கூண்டென்

    புறக்கணி னிருப்ப தென்னோ புகலெனப் புகல லுற்றான்.

25

      (இ-ள்) நன்மை பொருந்திய சொர்க்க லோகத்திற் போய்ச் சேர்ந்து அவ்வாறு சுகத்தை அனுபவிக்கும் நபி ஆதமலை கிஸ்ஸலாமவர்கள் மறத்தற் கருமையான வஸ்துவே! வேதங்கள் வராநிற்கும் மார்க்கத்திற்குச் சொந்தமான அரசாகிய ஆண்டவனே! அடையுதற்கரிய இந்தச் சுவர்க்க லோகத்தினது தேவர்களான மலாயிக்கத்துமார்கள் யாவரும் பெரிதாகக் கூடி எனது புறத்தினிடத்து இருக்கும் காரணம் யாது? கூறுவாயாக வென்று கேட்க; அதற்கு ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவும் கூறத் தொடங்கினான்.

 

124. நிதமழ கொழுகி வாச நிறைந்தமெய் முகம்ம தென்னு

    முதிர்கதிர் விளங்கி நின்றன் முதுகிடத் திருக்கை யாலே

    பதவியி னரிய விண்ணோ ரெண்ணிலாப் பகுப்புக் கூடி

    யிதமுறத் தெரிசிக் கின்றா ரென்றன னென்று முள்ளோன்.

26

     (இ-ள்) எக்காலமு முள்ளவனான ஜல்ல ஷகுனகுவத்த ஆலாவானவன் பிரதி தினமும் அழகானது சிந்திப் பரிமளம் நிறையப் பெற்ற திருமேனியை உடைய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மென்னும் முதிர்ந்த ஒளிவானது உமது முதுகின்கண் பிரகாசித்துக் கொண்டு யிருப்பதினால் முகத்தியினது அருமையான கணக்கற்ற தேவர்களாகிய மலாயிக்கத்து மார்களின் பகுதிகள் ஒன்று சேர்ந்து இனிமை பொருந்தும்படி தெரிசிக்கின்றார்களென்று கூறினான்.

 

125. மருள்கடிந் தறிவு பொங்கு முகம்மதி னொளிவை யென்மு

    னருள்கவென் றிருகை யேந்தி யாதநன் னபியுங் கேட்கப்

    பெரியவன் கருணை கூர்ந்து பெறுமுறை யிதுகொ லென்ன

    நெரிநடுப் புருவக் கான்மே னெற்றியி லொளிரச் செய்தான்.

27