பக்கம் எண் :

சீறாப்புராணம்

618


முதற்பாகம்
 

கிரணங்களை யுடைய வேலாயுதமானது தனது வலதுகையின் கண் ஒளிரும்படி துரிதத்தோடும் புறப்பட்டான்.

 

1644. உத்துபா வரவினைக்கண் டுருட்டுவார்

         திரைக்கரத்தி னோடிச் சோர்ந்து

     கத்துவால் வளைத்தரளங் கதிர்த்துவார்ந்

         தொழுகுமணிக் கடலி னாப்பண்

     வைத்துவாழ்ந் தெழுங்கதிர்போற் கதிர்கான்ற

         முகம்மதுள மகிழ்ந்து நோக்கித்

     தத்துவாம் பரிவயவ ருடனணித்தங்

         குறைகவெனச் சாற்றி னாரால்.

7

      (இ-ள்) அவ்வாறு புறப்பட்டு வராநின்ற உத்துபாவென்பவனின் வரவைக் கண்டு புரட்டுகின்ற நீண்ட அலைகளென்னும் கையின்கண் ஓடித் தளர்வடைந்து ஒலியா நிற்கும் வெண்ணிறத்தைக் கொண்ட சங்கங்களினது முத்துகளைப் பிரகாசித்து நீண்டு ஒழுகுகின்ற இரத்தினங்களையுடைய சமுத்திரத்தினது மத்தியில் வைத்து வாழ்ந்து ஓங்கும் சூரியனைப் போலப் பிரபையானது பிரகாசிக்கப் பெற்ற நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மனச்சந்தோஷமுற்று அவனைப் பார்த்துத் தாண்டிப் பாய்கின்ற குதிரைகளையுடைய வீரர்களான அசுஹாபிமார்களோடும் சமீபமாய் அங்கே தங்கியிருப்பாயாக வென்று சொன்னார்கள்.

 

1645. இகல்பொருந்து முளத்தோடு மிறபியா

         தரும்விடலை யிருந்து சோதி

     முகம்மதினை முகநோக்கிச் சூழ்ந்திருந்த

         பெரியோரை மதித்துப் போற்றிப்

     பகருமொழி சிறிதுளதென் னிடத்தினிலம்

         மொழியனைத்தும் பரிவிற் கேட்டுப்

     புகரறநும் மனத்தாய்ந்து தெளியுமென

         மறுத்துமுரை புகல்கின் றானால்.

8

      (இ-ள்) அவ்விதம் சொல்லவே விரோதத்தைப் பொருந்திய மனதோடும் றபீயாவென்பவன் தந்த இளம்பருவத்தையுடையவனான அவ்வுத்துபாவென்பவன் அவ்வாறே அங்கு இருந்து பிரகாசத்தையுடைய நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முகத்தைப் பார்த்து அவர்களை வளைந்து இருக்கப் பெற்ற பெரியவர்களான அசுஹாபிமார்களை இருதயத்திலெண்ணித் துதித்து என்னிடத்திற் சொல்லுவதற் கருமையாகிய சில வார்த்தைகளுண்டு. அந்த வார்த்தைக ளெல்லாவற்றையும் அன்புடன் கேள்வியுற்றுக்