பக்கம் எண் :

சீறாப்புராணம்

622


முதற்பாகம்
 

     விச்சையெனத் தெளிந்துபல பலசூழ்ச்சி

         விரித்தறத்தை விளக்கி யென்னோ

     டிச்சைபெற வுரைத்தனைநன் கியானுரைத்தல்

         கேட்டியென விசைக்கின் றாரால்.

15

      (இ-ள்) உத்துபா வென்பவன் அவ்வாறு மனத்தின்கண் பயமானது அணுப்போலு மில்லாது சொல்லிய வார்த்தைகளெல்லாவற்றையும் வானம், பூமி, பாதாளமாகிய மூன்று லோகங்களுந் துதியா நிற்கும் நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் காதுகளினாற் கேள்வியுற்றுத் தங்களினது அதரத்தின்கண் புன்சிரிப்புண்டாய் வித்தையென்று மனசின்கண் தேறிப் பற்பல உபாய வார்த்தைகளை விரித்துத் தருமத்தை விளக்கிப் பெரிய ஆசையானது பெறும்படி என்னோடு சொன்னாய்! நல்லது யான் சொல்லுவதை நீ கேட்பாயாக வென்று சொல்லுவார்கள்.

 

1653. எனக்கிறையோ னுரைத்தமறை மொழிவசனந்

         திறத்ததல வென்னக் கூறல்

     மனக்குறையோ வலதுனது மதித்திறனோ

         வறிகிலன்மும் மறையுந் தேர்ந்தோய்

     கனக்கமொழி யொன்றெடுத்துக் காட்டுகநீ

         யெனதுமொழிக் கவினைப் பின்ன

     ருனக்குரைப்பக் கேட்டுமொழித் திறனறியென்

         றெடுத்துரைத்தா ரொளிரும் பூணார்.

16

      (இ-ள்) முன்னுள்ள தவறாத்து, இஞ்சீல், சபூறென்னும் மூன்று வேதங்களையுந் தெளிந்தவனே! எனக்கு இறைவனான ஜல்ல ஜலாலகுவத்த ஆலாவானவன் சொல்லிய புறுக்கானுல் அலீமென்னும் வேதமானது சொல்லுகின்ற வார்த்தைகளை யுறுதியை யுடையவைக ளல்லவென்று நீ சொல்லுவது உனது பிரியவீனமோ? அல்லது உன்னுடைய அறிவினது வல்லமையோ? அவற்றை யானறிந்திலேன். ஆனால் இந்தப்படி நீ கற்ற வேதங்களிலுள்ள வார்த்தைகளில் ஒரு வார்த்தையையாவது கனதியாக எடுத்துக் காட்டுவாயாக! பிற்பாடு எனது வார்த்தைகளின் தக்க பண்பை உனக்குச் சொல்லக் கேட்டு அந்த வார்த்தைகளின் உறுதியை யறிவா யென்று பிரகாசியா நிற்கும் ஆபரணங்களை யுடையவர்களான நாயகம் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

 

1654. தரளவொளி தனிலுருவா யுதித்தமுகம்

         மதுவிதனைச் சாற்றக் கேட்டுப்

     பெருகுமுதன் மறைவசன மெவ்வுலகு

         மறிவதியான் பேசி லென்னே