பக்கம் எண் :

சீறாப்புராணம்

632


முதற்பாகம்
 

1673. சிதைவி லாமனத் திறல்வலிச் செயலினுக் கேற்ற

     மதிவ லோமியா மலமின நும்மதிக் கியையப்

     புதிய சூழ்ச்சியொன் றுரைத்தியே லெங்கள்புந் தியிற்கும்

     விதிய தாமவை நடத்துக வெனவுரை விரித்தார்.

15

      (இ-ள்) அன்றியும், நாங்கள் குறைபாடற்ற மனசினது வீரத்தைக் கொண்ட வலிமையான தொழில்களுக்கும் பொருந்திய புத்தியினது வல்லமை யுடையவர்களல்லேம். மேலும் உன்னுடைய புத்திக்குப் பொருந்தும் வண்ணம் நூதனமாகிய ஒரு ஆலோசனையைச் சொல்லுவாயானால் அது எங்களுடைய புத்திக்கும் குணமானதுதான் அந்த ஆலோசனையின்படி வேண்டிய அவைகளை நடத்துவாயாகவென்று வார்த்தைகளை விரிவாய் எடுத்துச் சொன்னார்கள்.

 

1674. உற்ற செய்திக ளனைத்தையு மோர்ந்துணர்ந் துரவோர்

     வெற்றி வாண்முக நோக்கிவெவ் வினைமுகம் மதுவைப்

     பற்ற றாக்கொலை படுத்திட னமரொடு பரிவின்

     முற்று மிந்நகர்ப் படைகொடு முடித்திட லரிதே.

16

      (இ-ள்) அவ்விதம் சொல்லவே, அங்கு பொருந்திய வர்த்தமானங்க ளெல்லாவற்றையும் அபூஜகிலென்பவன் தனது மனசின்கண் ஆராய்ந்தறிந்து விஜயத்தைக் கொண்ட வலிமையை யுடையவர்களான அந்தக் காபிர்களின் ஒள்ளிய முகத்தைப் பார்த்து கொடிய செயலை யுடைய முகம்ம தென்பவனைப் பற்றற்றுக் கொலை செய்யும் தொழிலை நம்மவர்களுடன் அன்பை யுடைய இந்தத் திருமக்கமா நகரத்தினது சேனை முழுவதைக் கொண்டும் முற்றுவிப்பது அருமையாகும்.

 

1675. வஞ்ச னைத்தொழி லினின்முகம் மதினொடும் வாதா

     விஞ்சை கற்றவ ராயிர ரெதிரினும் விளையா

     தஞ்ச லாதுரு வேற்றிடி லேறுரு வனைத்து

     நஞ்ச மாம்நம ருயிரினைச் செகுத்திட நடக்கும்.

17

      (இ-ள்) மேலும், வஞ்சனையை யுடைய செய்கைகளில் சபதமாய் விஞ்சைத் தொழிற் படித்தவர்களான ஆயிரம் பேர்கள் அந்த முகம்மதோடும் பயப்படாது எதிர்த்தாலும் இவர்களின் தொழில்கள் அவனிடத்தில் விளையாது. அவன் உருவேற்றினால் அந்த உருவுகளெல்லாம் நமக்கு விஷமாகும். அன்றியும், நமது ஜீவனை அழிக்கும் வண்ணம் திரியும்.

 

1676. வன்ம திட்புறத் தாலயத் துறைந்ததே வதத்தை

     யென்ம னக்குறை தவிர்த்திடர் தவிர்த்தியென் றிசைக்கி

     னன்மை யாயுரைத் திடுவதோ நமர்குலப் பவத்தாற்

     றின்மை யாயுரைத் திடுவதோ வெனத்தெரி கிலமால்.

18