பக்கம் எண் :

சீறாப்புராணம்

638


முதற்பாகம்
 

விடுப்பேனென்பதைச் சத்தியமாய்ச் சொல்லுகின்றான். பகுக்கா நிற்கும் அகத்தினது அறிவினாலும் தெளிவினாலும் பல ஒழுங்குகளினாலும் என்னோடு எதிர்க்கப்பட்டவர்க ளொருவரு மில்லரென்று சொல்லுகின்றான்.

 

1694. வாதி யாயித லாற்சில வாய்க்கொளா வசனங்

     காதி னாற்கொளப் படுவதன் றிழிந்தகட் டுரையை

     யோதி யோலையிற் றீட்டவு முடிவதன் றுடையோன்

     றூத னியானென வுரைத்தவ னுரைத்திடுந் துணிவே.

36

      (இ-ள்) அன்றியும், நான் யாவற்றையும் சொந்தமாயுடையவனான கடவுளின் றசூலென்று சொல்லி இதல்லாமல் அந்த முகம்மதென்பவன் தைரியமாய் எங்களோடு கூறி வாதியாகக் கூறிடும் சில வாய்கொள்ளாத வார்த்தைகளைச் செவிகளினால் கொள்ளப் படுவனவல்ல. அந்த இழிவை யுடைய பொய்யான வார்த்தைகளை வாயினாற் சொல்லி ஓலையில் எழுதவும் முடிவனவல்ல.

 

1695. மறந்த வழ்ந்திடு முகம்மது விரித்தசொன் மனுவாப்

     பிறந்த வர்க்கிடர் வடுவலாற் பெறுபய னிலையா

     லறந்த ழைத்திடுந் தலத்துறை யறபிக ளெவரு

     மிறந்தி டாவுயி ராய்த்தலை கவிழ்ந்திவ ணிருந்தோம்.

37

      (இ-ள்) அன்றியும், மறமானது தவழப் பெற்ற அந்த முகம்மதென்பவனின் விரித்துச் சொன்ன வார்த்தைகளினால் இவ்வுலகத்தின் கண் மனுவாகப் பிறந்தவர்களுக்குத் துன்பத்தையுடைய குற்றமேயல்லாமல் பெறக் கூடிய பிரயோசன மானது யாதொன்று மில்லை. தருமமானது ஓங்கப்பெற்ற தலமாகிய இந்தத் திருமக்கமா நகரத்தின் கண் தங்கியிருக்கப்பட்ட அறபிகளான நாங்க ளியாவர்களும் இறக்காத உயிராக எங்களது தலைகளைத் தாழச் செய்து இங்கு தங்கியிருக்கின்றோம்.

 

1696. இந்த வாசக மறிந்திவ ணிடத்தெழுந் தருளி

     வந்து பார்த்திடின் முகம்மதின் மாயவஞ் சனையும்

     விந்தை யேற்றுரு மந்திரச் சூழ்ச்சியும் வீறுஞ்

     சிந்தி நங்கிளை யவர்மனத் துன்பமுஞ் சிதையும்.

38

      (இ-ள்) ஆதலினால் தாங்கள் இந்த வாசகத்தை யுணர்ந்து இத்திருமக்கமா நகரத்தின் கண் எழுந்தருளி வந்து பார்த்தால் அந்த முஹம்மதென்பவனின் மாயத்தை யுடைய வஞ்சனைகளும் வித்தையினால் ஏற்றா நின்ற உருவினை யுடைய மந்திரத்தினது நுட்பமும் அவனது பெருமையும் கெட்டு நமது குடும்பத்தவர்களின் மனதிலுள்ள துயரமும் அழியும்.