பக்கம் எண் :

சீறாப்புராணம்

749


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றைய தினம் நீங்கி மறுநாள் அபூஜகிலென்பவன் தனது பந்துக்களோடு அவ்விடத்திற் போய்ச் சேர்ந்தான். விஜயத்தினது நல்ல சன்மார்க்கத்தையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் தங்களின் துணையாகிய சினேகிதன்மார்களோடும் விரைவாய்ச் சென்று வெற்றியையுடைய அரசராகிய அவ்வபீபென்பவர் அனுப்பியவர்களிடத்திற் கூடினார்கள்.

 

2004. ஒட்டை வாய்திறந் துரைப்பதற் கெவர்முன முரைப்ப

     திட்ட மாயுரை யெனவபூ சகலுட னியம்பக்

     கட்டு ரைப்படிக் கரியினை யெவர்களுங் களிப்ப

     விட்டு ரைத்திடென் றுரைப்பதி யானென விரித்தான்.

31

      (இ-ள்) அவ்விதம் கூடி அபூஜகிலென்பவனோடு ஒட்டகங்கள் தமது வாயைத் திறந்து கூறுவதற்கு முன்னர் சொல்வோர் யாவர்? இட்டமாய்க் கூறுவாயாகவென்று கேட்க; அவன் யாவர்களும் மகிழும் வண்ணம் சத்திய வாசகப்படி சாட்சியை விடுத்துச் சொல்லென்று கூறுவது யானென்று விரித்து விடை கூறினான்.

 

2005. நன்று கூறுமு னென்றலு மபூசகல் நடந்து

     சென்று பூம்பொழி லொட்டகை யனைத்தையுந் திரட்டி

     நின்று நீவிர்கள் சுமந்திவ ணிறக்கிய நிதியம்

     வென்றி மன்னவ னெவர்க்கனுப் பியதென விரித்தான்.

32

      (இ-ள்) அவ்வாறு கூற, நல்லது நீயே முன்னர் கூறுவாயாக வென்ற அளவில் அவ்வபூஜகிலென்பவன் நடந்து போய் அழகிய சோலையின் கண்ணுள்ள ஒட்டகங்க ளெல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி அங்கே நின்று கொண்டு நீங்கள் சுமந்து இவ்விடத்தில் கொண்டு வந்து இறக்கிய திரவியங்கள் வெற்றியையுடைய மன்னவனான ஹபீபென்பவன் யாவருக்காய் இங்கு அனுப்பினதென்று விரித்துக் கேட்டான்.

 

2006. கேட்ட பூசகல் நிற்பவொட் டகக்கிளை பதிற்றும்

     நாட்டி வைத்திடுஞ் சிலையென நவின்றில மறுகி

     மீட்டுங் கேட்டலு நவின்றில வீரமும் வலியும்

     போட்டுக் கேட்டனன் பிற்றையும் புகன்றிசைத் திலவே.

33

      (இ-ள்) அபூஜகிலென்பவன் அவ்வாறு கேட்டு நிற்க ஒட்டகவினம் பத்தும் பூமியில் நாட்டி வைத்திருக்கும் கற்சிலையைப் போல யாதொன்றும் கூறிலன. திரும்பியும் மறுக்க முற்றுக் கேட்டமாத்திரத்தில் அப்பொழுதும் கூறிலன. திரும்பியும் மறுக்கமுற்றுக் கேட்ட மாத்திரத்தில் அப்பொழுதும் கூறிலன. தனது வீரத்தையும் வலிமையையும் போட்டுக் கேட்டான். பிறகும் தமது வாய்களாற் கூறிப் பகிர்ந்திலன.