பக்கம் எண் :

சீறாப்புராணம்

750


முதற்பாகம்
 

2007. பரித்த வொட்டகை பகர்ந்தில கரியெனப் பலரு

     மிரைத்து மாமறை முகம்மதின் றிருமுகத் தெதிர்ந்து

     பிரித்தி டாக்கரி யாய்ப்பெரு வாயினைப் பிளந்து

     விரித்து ரைத்திட விளம்புமென் றெடுத்துரை விரித்தார்.

34

      (இ-ள்) அப்பொழுது அங்கு கூடியிருந்த பல ஜனங்களும் சுமைகளைத் தாங்கிய ஒட்டகங்கள் சாட்சி கூறவில்லை யென்று சத்தித்து மகத்தாகிய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது முகத்தின்கண் எதிர்ப்பட்டு நீங்கள் பிரிக்கக்கூடாத சாட்சியாக அவ்வொட்டகங்கள் தமது பெரிய வாயைப் பிளந்து விரித்துக் கூறும் வண்ணம் கூறுங்களென்று வார்த்தைகளை எடுத்து விரிவாய்ச் சொன்னார்கள்.

 

2008. நிகர ரும்பதி முதியவர் நிகழ்த்திடும் வசன

     முகம்ம தின்செவிப் புகுதலு மனமிக மகிழ்ந்து

     மிகுவி தப்புது மைகடர வொட்டையை விளித்துப்

     புகலு மென்றன ரபூசகல் கெடுமனம் புழுங்க.

35

      (இ-ள்) ஒப்புச் சொல்லுதற் கருமையாகிய அந்த மக்கமா நகரத்தினது வயதால் முதிர்ந்தவர் அவ்வாறு கூறும் வார்த்தைகள் நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் காதுகளில் நுழைந்த மாத்திரத்தில் மிகவும் மனக்களிப்படைந்து அபூஜகிலென்பவனின் கெட்ட மனமானது புழுக்க மடையவும், அவ்விதமான ஆச்சரியங்களைக் கொடுக்கவும், அந்த ஒட்டகங்களை யழைத்து நீங்கள் சாட்சி கூறுங்களென்று கூறினார்கள்.

 

2009. உரைத்த சொல்லுளந் தரித்திடக் கிடந்தவொட் டகங்க

     ணிரைத்தெ ழுந்தற வளைநெடுங் கழுத்தினை நீட்டி

     விரித்த வாலசைத் துவந்திரு விழிகளை விழித்துப்

     பெருத்த வாய்திறந் தறபெனு மொழியினிற் பேசும்.

36

      (இ-ள்) நாயக மவர்கள் அவ்வாறு கூறிய வார்த்தைகள் மனசின்கண் தங்கப் படுத்திருந்த ஒட்டகங்கள் விருப்புற்று வரிசையாயெழும்பி மிகவும் வளைந்த நெடிய கழுத்தை நீட்டி விரித்த வாலை அசையும்படி செய்து இரண்டு கண்களையும் விழித்துப் பெரிய வாயைத் திறந்து அறபென்னும் பாஷையினாற் கூறா நிற்கும்.