பக்கம் எண் :

சீறாப்புராணம்

756


முதற்பாகம்
 

2024. அன்ன மன்னமென் னடையினர் சிறுவர்க ளல்லான்

     மன்னு மாடவ ரெண்ணொரு பஃதிரு வருமாய்ப்

     பொன்னு லானப சாவள நாடணி புரத்தி

     லின்ன லில்லெனச் சேர்ந்தவண் மகிழ்வொடு மிருந்தார்.

10

      (இ-ள்) அவ்விதம் அனுப்பிய அன்னப்பட்சியை நிகர்த்த மெல்லிய நடையையுடையவர்களான மாதர்களும் பாலியர்களுமல்லாமல் பொருந்திய புருஷர்கள் பன்னிரண்டு பேர்களும் கணக்காய் ஒளிவானது உலாவப் பெற்ற வளநாடாகிய ஹபஷாவென்னும் அழகிய நகரத்தில் யாதொரு துன்பமுமில்லை யென்று போய்ச் சேர்ந்து அவ்விடத்தில் மகிழ்ச்சியோடும் தங்கியிருந்தார்கள்.

 

2025. உறைந்த மாந்தருக் கபசிய ரரசெனு முரவோ

     நிறைந்த நன்கலை யொடும்பல வரிசையு நிதியுங்

     குறைந்தி டாதெடுத் தருளிநன் மொழிபல கொடுத்துச்

     சிறந்த தன்முத லினத்தினு மினத்தராய்ச் செய்தான்.

11

      (இ-ள்) அவ்வாறு போய்த் தங்கிய அந்த ஜனங்களுக்கு அவ்வபஷா நாட்டிலுள்ளவர்களான அரசரென்று கூறும் முதியோர்கள் பூரணப்பட்ட நல்ல வஸ்திரங்களுடன் பல வரிசைகளும் திரவியமும் குறையாது எடுத்துக் கொடுத்தார்கள். அன்றியும், பல வார்த்தைகளைப் பேசிச் சிறப்புற்ற தங்களின் முதன்மையான பந்துக்களிலும் மிகவும் பந்துக்களாகச் செய்தார்கள்.

 

2026. விதித்த தீனிலைக் குரியரை யபசியர் வேந்தன்

     மதித்து நன்கொடு முயர்த்தின னெனும்வர லாற்றைக்

     கொதித்த சிந்தைய னபூசகல் குழுவொடுங் கேட்டுக்

     கதித்த சூழ்ச்சியின் வேறொரு வினைகரு தினனே.

12

      (இ-ள்) நியமிக்கப்பட்ட தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற்குச் சொந்தமானவர்களை ஹபஷி நாட்டையுடையவர்களான மன்னர்கள் அவ்வாறு மதித்து நன்மையுடன் மேன்மைப் படுத்தினார்களென்னும் வரலாற்றைக் கொதிக்கப் பெற்ற மனத்தை யுடையவனாகிய அபூஜகி லென்பவன் தனது கூட்டத்தோடும் கேள்வியுற்று அதிகரித்த தந்திரத்தினால் வேறே யொரு செயலைத் தன் சிந்தையின்கண் எண்ணினான்.

 

2027. வில்லு மிழ்ந்தசெம் மணித்தொடை திரண்டவெண் டரளம்

     பல்ல வம்பொரு வாத்தம னியத்துகில் பலவுஞ்

     சொல்ல ருமிர தச்சுவை யொட்டகச் சுமையா

     மல்லு றும்புயன் கரத்தின்முத் திரையொடும் வைத்தான்.

13