பக்கம் எண் :

சீறாப்புராணம்

760


முதற்பாகம்
 

அவர்கள் கொண்டு வந்த பல பொருட்களையும் தனக்கு வேண்டா மென்று வெறுத்தான்.

 

2038. சதும றைப்பொருண் முகம்மதின் வழியவர் தமைநல்

     லிதம னத்தொடு மனுசரித் தபூசகு லிடத்திற்

     புதிய ரைப்புறம் போக்கின னெனுமொழிப் புகழை

     மதுகை வேந்தபீத் தாலிபு கேட்டுள மகிழ்ந்தார்.

24

      (இ-ள்) அப்பொழுது வெற்றியைத் தரித்த மன்னவரான அபீத்தாலி பென்பவர் தௌறாத்து, இன்சீல், சபூர், புறுக்கானென்னும் நான்கு வேதங்களின் பொருளாகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யுடையவர்களை நல்ல இதத்தைக் கொண்ட சிந்தையோடும் அனுசரித்து அபூஜகி லென்பவ னிடத்தினுள்ள புதியராகிய தூதுவர்களைத் தனது ஊரில் நின்றும் வெளியில் போகும் வண்ணம் செய்தானென்னும் கீர்த்தியை யுடைய வார்த்தைகளைத் தமது காதுகளினாற் கேள்வியுற்று மனக்களிப்படைந்தார்.

 

2039. வணக்க வாசகத் தொடுமப சரசனை வாழ்த்தி

     யிணக்கி நற்பொருள் பெறப்பல பயித்தெடுத் தெழுதி

     யுணக்கும் புன்மனத் தபூசக லெழுதிய வோலைப்

     பிணக்க றுத்தபீத் தாலிபு கொடுத்தனுப் பினரால்.

25

      (இ-ள்) அவ்வாறு களிப்படைந்த அபீத்தாலிபென்பவர் வணக்கத்தைக் கொண்ட வாசகத்துடன் ஹபஷா நகரத்தினது மன்னவனைத் துதித்து இணக்கி நல்ல அர்த்தத்தைப் பெறும் வண்ணம் பலபயித்துக்க ளென்னும் அறபிக் கவிகளை எடுத்து வரைந்து வாடா நிற்கும் கீழ்மையான மனத்தையுடைய அபூஜகி லென்பவன் வரைந்த நிருபத்தினது பிணக்கை இல்லாமல் அறுக்கும்படி கொடுத்து அனுப்பினார்.

 

2040. புதிய நற்பொருள் பெறத்தெரி கவிதையின் புகழான்

     மதுர வாசக மெழுதிய துணர்ந்துள மகிழ்ந்து

     துதிசெ யுங்கலி மாநெறிப் படுமறைத் தூயோர்க்

     கதிவி தப்பல வரிசைசெய் தபசர சிருந்தான்.

26

      (இ-ள்) புதுமையை யுடைய நல்ல அர்த்தத்தைப் பெறும் வண்ணம் தெரியுகின்ற கீர்த்தியினது பாட்டுகளால் இனிமையாகிய வாசக மெழுதிய நிருபத்தை ஹபஷா நகரத்தினது மன்னவன் அறிந்து மனக் களிப்படைந்து துதிக்கின்ற “லாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர்ற சூலுல்லாஹி” யென்னும் கலிமாவினது ஒழுங்கு படா நிற்கும் புறுக்கானுல் அலீமென்னும்