பக்கம் எண் :

சீறாப்புராணம்

770


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், சிறந்த வண்டுக ளானவை இதழ்களைக் கொண்ட புஷ்பங்களினது தேனை யருந்திப் பாடுகின்ற தோற்றமானது, இவ்விடத்திற்கு வாட்ட மற்ற நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வந்தார்கள் துன்பப்படுகின்ற அம்மானை மீட்பார்கள். அந்த வேடனும் ஈமானை ஆசிப்பான். மற்றும் பயங்களை நீக்குவார்கள். நீங்கள் உங்கள் கூடுகளில் தங்கி ஒளிப்பதை மாற்றுங்க ளென்று பலவாய்க் கூவியதைப் போன்றது.

 

2067. நிறைவளஞ் சுரந்த கானி னின்றநந் நபியை நோக்கிக்

     குறியவா லசைத்து நீண்ட கொழுங்கழுத் துயர்த்தி நீட்டி 

     மறைபடா மதியே வண்மை முகம்மதே யென்னப் போற்றித்

     தறுகிடா தெவர்க்குங் கேட்பச் சலாமெடுத் துரைத்துக் கூறும்.

16

      (இ-ள்) நிறைந்த செல்வ மானது அதிகரிக்கப் பெற்ற அக்காட்டினிடத்து நின்ற நமது நாயகம் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களை அந்த மானானது பார்த்துத் தன் குறிய வாலை யாட்டி நீட்சியுற்ற செழிய கழுத்தை யுயரச் செய்து நீட்டி ஒரு காலத்தி லாயினும் மறையாத சந்திர னானவரே! அழகிய முகம்ம தென்னும் திருநாமத்தையுடையவரே! என்று சொல்லித் துதித்துத் தறுகாது யாவர்களுக்கும் கேட்கும் வண்ணம் சலா மெடுத்துச் சொல்லிக் கூறத் தொடங்கியது.

 

2068. வல்லவ னுண்மைத் தூதே மன்னுமா நிலத்தின் மாந்த

     ரல்லலை யகற்றி வேதத் தறநெறி பயிற்றிச் சொர்க்கத்

     தில்லிடைப் புகுத்தப் பூவி னிடத்தினி லுதித்த கோவே

     யொல்லையி னெனது சொற்கேட் டுவந்தரு ளளிக்க வேண்டும்.

17

      (இ-ள்) வல்லவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் சத்திய தூதுவரே! பொருந்திய மகத்தான இப்பூமியினது மாந்தர்களின் துன்பங்களை யொழித்துப் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தின் புண்ணிய மார்க்கத்தைக் கற்பித்துச் சொர்க்க லோகத்தினது வீட்டின்கண் புகுத்தும்படி இவ்வுலகத்தில் அவதரித்த அரசரே எனது வார்த்தைகளை விரும்பிக் கேட்டு விரைவில் கிருபை யருளல் வேண்டும்.

 

2069. என்னுயி ரெனநீங் காத வினமுமென் கலையுங் கன்றுந்

     துன்னிடத் திரண்டு பைம்புற் றுறைதொரு மேய்ந்து நாளு

     முன்னிய பசிக டீர்த்தோர் மிருகங்கட் குயிர்கொ டாமன்

     மன்னிய மலையின் சார்பு மனப்பய மகற்றி வாழ்ந்தேம்.

18