பக்கம் எண் :

சீறாப்புராணம்

772


முதற்பாகம்
 

குறைத்துத் தண்ணீர் குடித்து எள்ளளவாயினும் பயமில்லாமல் நின்று உலாவுகின்ற சமயத்தில்.

 

2073. அத்திசைக் கெதிரின் மேல்பா லடுத்தொரு குவட்டின் கண்ணே

     மத்தகக் கரியு மாய்க்கும் வரிப்புலி முழக்க நீண்ட

     குத்திரத் தசனித் தாக்கின் குவலய மதிரக் கேட்டுத்

     தத்தியெத் திசையுந் திக்குந் தனித்தனி சிதறி னேமால்.

22

      (இ-ள்) நாங்கள் நின்றிருந்த அந்தத் திசைக்கு முன்னாற் சமீபித்து மேற்பக்கத்தில் ஒரு மலையின்கண் மத்தகத்தைக் கொண்ட யானையையும் வதை செய்யா நிற்கும் இரேகைகளையுடைய ஓர் புலியினது முழக்கத்தை நெடிய குரூரமமைந்த இடியினது தாக்கைப் போல இவ்வுலகமானது அதிரும்படி காதுகளினாற் கேள்விற்றுச் சாடி எந்தத் திசைகளிலும் தனித்தனி சிதறலாயினோம்.

 

2074. கூடிய தூறும் பாரிற் குளித்திடக் குதித்து வல்லே

     யோடிய திசையி னொன்றை யொன்றுகாண் கிலதா யானும்

     வாடிய மனத்தி னோடு மறியையு நோக்கா தாக்கை

     யாடியிற் றுரும்பாய் வேறோ ரடவியி னடைந்திட் டேனால்.

23

      (இ-ள்) கூட்டத்தைக் கொண்ட சிறு செடிகளும் பூமியின்கண் படியும்படி சாடி விரைவாய் அவ்வாறு ஓட்டமுற்ற திக்குகளில் ஒன்றையொன்று பாராததால் நானும் வாட்டமடைந்த இருதயத்துடன் எனது குட்டியையும் பாராது சரீரமானது சமுத்திரத்திலகப்பட்ட துரும்பைப் போன்று வேறேயொரு காட்டின்கண் போய்ச் சேர்ந்தேன்.

 

2075. அடவியி னடையுங் காலை யவ்வுழைக் கரந்திவ் வேடன்

     றுடரிடும் வலையைச் சுற்றிச் சுருக்கிடப் புலிவாய்த் தப்பி

     மி்டலரி யுழையிற் சிக்கி மிடைந்தென மிடைந்து செவ்வி

     யுடலுயிர் பதைப்பத் தேம்பி யுணர்வழிந் தொடுங்கா நின்றேன்.

24

      (இ-ள்) அவ்வாறு அந்தக் காட்டின்கண் போய்ச் சேர்ந்த சமயத்தில் அவ்விடத்தில் இந்த அரபி வேடன் ஒளித்துக் கயிற்றினால் உண்டாகிய தனது வலையைச் சுற்றி சுருக்கப் புலியின் வாயில் நின்றுந் தப்பி வலிமையைக் கொண்ட சிங்கத்தினது இடத்திலகப்பட்டு வருத்தமடைந்தாற் போலும் வருத்தமடைந்து அழகிய தேகமும் ஆவியும் பதைக்கும் வண்ணம் அழுது அறிவழிந்து ஒடுக்கமுற்றேன்.