பக்கம் எண் :

சீறாப்புராணம்

773


முதற்பாகம்
 

2076. வலையிடத் துறைந்த தென்ன மகிழ்ந்தெழந் தோடி வந்து

     நிலைபெற வடுத்துச் சாய்த்து நின்றெனை நோக்கி யாகத்

     துலைவுறும் பசிக்கின் றென்பா லுற்றனை யென்னக் கூறிச்

     சிலைகணை நிலத்திற் சேர்த்தித் தெரிந்தொரு பாசந் தொட்டான்.

25

      (இ-ள்) அவ்விதம் ஒடுக்கமுற அவ்வேடன் மானானது நமது வலையி னிடத்துத் தங்கிற் றென்று களிப்புற்று எழும்பி ஓடி வந்து நிலைபெறச் சமீபித்து நின்று என்னைச் சரித்துப் பார்த்து எனது உடலின்கண் உலைவுறாநிற்கும் பசிக்காய் நீ இன்றைய தினம் என்னிடத்தில் வந்து சேர்ந்தாய் என்று சொல்லித் தனது வில்லையும், அம்பையும் பூமியின்கண் பொருந்த வைத்து விட்டுக் கையினால் ஒரு கயிற்றைத் தீண்டித் தெரிந்து எடுத்தான்.

 

2077. திருக்கற நாலு தாளுஞ் செவ்விதிற் கூட்டி யங்கை

     வரிக்கயி றதனாற் சுற்றி மாறுகொண் டீழ்த்துக் கட்டிக்

     கரிக்கர மென்ன நீண்ட கரத்தினாற் றாங்கி முன்னர்ச்

     சுருக்கிய வலையை நீக்கித் தோளினி லெடுத்துக் கொண்டான்.

26

      (இ-ள்) நான்கு பாதங்களையும் களங்கமறும்படி சிறப்பாய்ச் சேர்த்து அவ்வாறு எடுத்த அழகிய கரத்தின் வரியைப் பெற்ற கயிற்றினால் மாறுகொண்டு சுற்றி இழுத்துக்கட்டி யானைத் தும்பிக்கையைப் போலும் நீண்ட தனது கைகளால் தாங்கி ஆதியிற் சுருக்கிய வலையை விட்டும் வேறுபடுத்தித் தோளின்கண் எடுத்துக் கொண்டான்.

 

2078. கவைமுனைக் கோட்டுச் செவ்விக் கலையுட லுயிரு மீன்ற

     நவியுட லுயிரு மோர்மா னுடன்கொண்டு நடப்ப தொத்துச்

     சவிபுறந் தவழுங் கோட்டுச் சார்பிலிவ் வனத்தின் கண்ணே

     சுவையறு மொழியா னென்னைச் சுமந்திவ ணிறக்கி வைத்தான்.

27

      (இ-ள்) இரசமற்ற வார்த்தைகளை யுடையவனான இவ்வேடன் அவ்விதம் எடுத்துக் கவரைக் கொண்ட முனையினது கொம்புகளையுடைய அழகிய என் கலைமானின் சரீரத்தையும் ஜீவனையும் யான் பெற்ற கன்றினது சரீரத்தையும் ஜீவனையும் ஒரு மானுடன் கொண்டு செல்வதை நிகர்த்து என்னைச் சுமந்து வந்து சூரியனானவன் விலகிப் பக்கத்தில் தவழா நிற்கும் அம் மலையினது சார்பில் இச்சோலையினிடத்து இறக்கி வைத்தான்.