பக்கம் எண் :

சீறாப்புராணம்

774


முதற்பாகம்
 

2079. கட்டுடன் கிடந்து நெஞ்சிற் கவலையுள் ளழிந்து மாறா

     நெட்டுயிர்ப் பெறிந்து சோர்ந்து நிலத்திடைக் கிடக்கு நேரம்

     வட்டவெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே யும்மைத்

     திட்டியிற் றெரியக் கண்டேன் றிடுக்கமுந் தீர்ந்த தன்றே.

28

      (இ-ள்) அந்த அறபி வேட்டுவன் அவ்வாறு கட்டிய கட்டோடு நானிருந்து மனசினது விசாரத்தினால் நெஞ்ச மழிந்து நீங்காத பெருமூச்சு விட்டு மெலிந்து பூமியின்கண் கிடக்கின்ற சமயம் வெள்ளிய சந்திரவட்டக் குடையினது வள்ள லாகிய முகம்மதென்னுந் திருநாமத்தையுடைய நபிகட்பெருமானே! உங்களை எனது கண்களில் தெரியும்படி பார்த்தேன். எனது திடுக்கமும் நீங்கிற்று.

 

2080. எனவிவை யுரைத்துப் பின்னு மெழினபி முகத்தை நோக்கி

     மனநிலை வாக்கி னோடு முகம்மதே யென்னப் போற்றிப்

     புனமுறை விலங்கின் சாதி யாயினுந் தமியேன் புன்சொற்

     றனையருட் படுத்திக் கேட்பீ ரென்றுரை சாற்றிச் சாற்றும்.

29

      (இ-ள்) என்று இவைகளைக் கூறிப் பின்னரும் அழகிய நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வதனத்தைப் பார்த்து மன நிலைமையைப் பெற்ற வாக்குடன் முகம்மதென்னும் அபிதானத்தை யுடையவரே! என்று சொல்லித் துதித்து யான் கொல்லைகளில் தங்கா நிற்கும் மிருகச் சாதியானாலும் தமியேனாகிய எனது கீழ்மையான வார்த்தைகளைக் கிருபை வைத்துக் கேட்பீர்களாக வென்று கூறிச் சொல்லத் தொடங்கியது.

 

2081. இச்சிலை வேடன் கையி னிறத்தலை யுளத்தி லெண்ணி

     யச்சமுற் றுரைப்ப தன்றிவ் வவனியிற் சீவ னியாவு

     நிச்சய மிறத்த லல்லா லிருப்பவை நிலத்தி னுண்டோ

     முச்சகம் விளக்குந் தீனின் முதன்மறை முறைமைச் சொல்லோய்.

30

      (இ-ள்) வானலோகம் பூலோகம் பாதாள லோகமென்னும் மூன்று லோகங்களிலும் விளக்கா நிற்கும் தீனுல் இஸ்லா மென்று கூறு மார்க்கத்தினது முதன்மை யான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தின் முறைமை யமைந்த வசனங்களை யுடைய முகம்மது நபியே! நான் இந்த மலையினது வேட்டுவன் கையால் இறப்பதை மனசின்கண் ணினைத்துப் பயந்து கூறுவதல்ல, இந்த வுலகத்தில் ஜீவன்க ளனைத்தும் நிச்சயமாக இறப்பதே யல்லாமல் இருக்கப் பட்டவைகள் பூமியினிடத் துள்ளனவா? இல்லை.