பக்கம் எண் :

சீறாப்புராணம்

775


முதற்பாகம்
 

2082. கலையெனப் பிரிவி லாது கண்ணிமை காப்ப தென்ன

     வலைவறக் காப்பச் சின்னா ளவனியிற் கலந்து வாழ்ந்தேன்

     குலவிய மறியு மீன்றேன் குறித்தினி யிருப்ப தென்கொ

     லிலைநுனிப் பனியி னாக்கை யிறத்தலே நலத்தன் மன்னோ.

31

      (இ-ள்) அன்றியும், எனது கலைமானென்னு என்னை விட்டும் நீங்காது கண்களை இமை காப்பது போலும் துன்பமறக் காக்கும் வண்ணம் குறையக் காலம் இந்தப் பூமியின்கண் கலந்து வாழ்ந்தேன். அவ்விதம் வாழ்ந்து பிரகாசியா நிற்கும் ஓர் கன்றையும் பெற்றேன். இனி இவ்வுலகத்தினிடத்து மனசின்கண் சிந்தித் திருப்பது யாது? ஒன்றுமில்லை. இலையினது நுனியிற்றங்கிய பனியை நிகர்த்த இந்திரியத்தால் உருவெடுத்த இந்தச் சரீரமானது இறந்து படுவதே நல்லது.

 

2083. அடவியிற் கிரியில் வீணி லவதியுற் றிறந்தி டாமல்

     வடிவுடைக் குரிசி லேநும் மலர்ப்பதச் செவ்வி நோக்கிப்

     படுபரற் கானில் வேடன் பசிப்பிணி தீர்ப்ப தாக

     வுடலிறத் திடுத லெவ்வெவ் விறப்பினு முயர்ச்சி மேலோய்.

32

      (இ-ள்) அழகையுடைய குரிசிலே! மேன்மையைக் கொண்ட முகம்மதென்னும் அபிதானத்தை யடைந்த நபிகட்பெருமானே! காட்டி னிடத்தும் மலையினிடத்தும் வீணாகத் துன்பப்பட்டு இறந்து போகாமல் உங்களது தாமரை மலரைப் போன்ற திருவடிகளின் சிறப்பைப் பார்த்து மிகவும் பரற்கற்களை யுடைய கானகத்தினது வேட்டுவன் பசி யாகிய நோயைத் தீர்ப்பதற் காகச் சரீரத்தை இறக்கச் செய்யுதல் எந்தெந்த இறப்பைப் பார்க்கிலும் மிக உயர்ந்தது.

 

2084. வரிப்புலி முழக்கங் கேட்டு மானினஞ் சிதறித் தத்தந்

     தரிப்பிட மறியா தொன்றுக் கொன்றுடன் சாரா தெங்கு

     முரைப்பரி தென்னப் போந்த தாலென தொருத்த றேடி

     யிரைப்பறா நெடுங்கான் போய்ப்போ யிருந்ததோ விறந்த தேயோ.

33

      (இ-ள்) ஆயினும் இரேகைகள் படர்ந்த புலியினது முழக்கத்தைக் காதுகளினாற் கேள்வியுற்று மான் கூட்டமானது சிதறுதலடைந்து தத்தம் இருப்பிடத்தை யுணராமலும் ஒன்றுக் கொன்று கூடப் பொருந்தாமலும் சொல்லுதற் கரிதென்று எவ்விடத்தும் போனதினால் எனது ஆண்மான் என்னைத் தேடி ஒலியானது மாறப் பெறாத நெடிய காட்டினிடத்திற் சென்று சென்று தங்கி யிருந்ததோ? அல்லது இறந்து போயிற்றோ?