பக்கம் எண் :

சீறாப்புராணம்

777


முதற்பாகம்
 

னானது பிரியுமென்று மனசின்கண் நினைத்திலன். நெடிய தேகத்தையுடைய உடும்பினது ஜீவனைத் தாங்கிய புண்ணிய அரசாகிய முகம்மதென்னும் நபிகட் பெருமானே! இது தப்பல்ல, சத்தியம்.

 

2089. மன்னிய கலிமா வென்னும் வழிநிலை மாந்த ரியாரும்

     பொன்னிலம் புகுதச் செய்யும் புண்ணியப் புகழின் மிக்கோய்

     கொன்னிலைச் சிலைக்கை வேடன் கொடும்பசி தணிப்பே னென்றாட்

     பின்னிய பிணிப்பு நீக்கிப் பிணையென விடுத்தல் வேண்டும்.

38

      (இ-ள்) பொருந்திய கலிமாவென்னும் ஒழுங்கினது நிலைமையினால் ஜனங்க ளனைவர்களையும் சொர்க்கலோகத்தின் கண் போய்ச் சேரச் செய்கின்ற புண்ணியத்தைப் பெற்ற கீர்த்தியினது மேன்மையமைந்த முகம்மது நபியே! யான் பிராணிகளைக் கொல்லா நிற்கும் நிலைமையைக் கொண்ட வில்லைத் தாங்கிய கையையுடைய இந்த வேட்டுவனது கொடிய பசியைத் தணியும்படி செய்வேன். எனது பாதங்களிற் பின்னிய கட்டையொழித்து எனக்காகத் தங்கள் பிணையென்று சொல்லி என்னை விடுவித்தல் வேண்டும்.

 

2090. விடுத்திரேற் கலையைச் சேர்ந்து விழைவுறுங் கவலை தீரப்

     படுத்தியென் னினத்துக் கோதிப் பறழினுக் கினிய தீம்பால்

     கொடுத்தரும் பசியை மாற்றிக் குலத்தொடுஞ் சேர்த்து வல்லே

     யடுத்தொரு கடிகைப் போதி லடைவனென் றறைந்த தன்றே.

39

      (இ-ள்) அவ்வாறு தாங்கள் என்னை விடுவிப்பீர்களேயானால் யான் எனது ஆசைப் பெருக்கமுற்ற ஆண் மானைச் சேர்ந்து அதன் விசாரங்களை யொழித்து என் கூட்டத்திற்கும் சொல்லி மிகவும் இனிமையமைந்த பாலைக் கன்றுக் கீந்து அரிதான அதன் பசியை அகற்றி அக்கூட்டத்தோடும் சேர்த்துவிட்டு விரைவில் ஒரு நாழிகை நேரத்தில் இவ்விடத்தில் வந்த சமீபித்துச் சேருவேனென்று கூறிற்று.

 

2091. மானுரை வழங்கக் கேட்டு மனத்தினிற் கருணை பொங்கிக்

     கானவேட் டுவனை நோக்கிக் கன்றிடை வருத்தந் தீர்த்துத்

     தான்வரு மளவு மியானே பிணையெனச் சாற்றி நின்றார்

     தீனெனும் பயிரைக் காத்துச் செழும்புகழ் விளைக்குஞ் செம்மல்.

40

      (இ-ள்) தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கப் பயிரைக் காத்து செழிய கீர்த்தியை விளைக்கா நிற்கும் செம்மலாகிய நமது நாயகம்