பக்கம் எண் :

சீறாப்புராணம்

784


முதற்பாகம்
 

இவ்வுலகத்தின்கண் ஜீவித்திருப்பதற்கு இடமுள்ளதா? இல்லை! இந்தப் பூமியின்கண் மேலும்! மேலும்!! தங்கி யிருக்கும் பெரிய விருப்பம் இருப்பதை மாற்றுதல் வேண்டும்.

 

2109. நதி்யிடைப் பெருக்கின் முன்னோர் நவ்விபி னடக்கு நாளின்

     மதியிலி யொருத்தன் வள்ளன் முகம்மதின் வசன மாறிப்

     புதியநன் னீரு ளாழ்ந்து நொடியினில் வீழ்ந்து போய

     வதிசய முலகில் விண்ணி லியாவரே யறிகி லாதார்.

58

      (இ-ள்) அன்றியும், முன்னர் ஆற்றின்கண் ஜலப் பிரவாகத்தில் ஒப்பற்ற மானினது பின்னால் நடக்கும் நாளில், அறிவற்றவனான ஒருவன் வள்ளலாகிய நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வார்த்தைகளை மாறி நொடி நேரத்தில் புதுமையைக் கொண்ட நல்ல தண்ணீரில் விழுந்து அமிழ்ந்து இறந்து போன ஆச்சரியத்தை இப் பூலோகத்திலும் வான லோகத்திலும் அறியாதவர்கள் யாவர்? ஒருவருமில்லர்.

 

2110. ஈதெலா மறிந்து மென்னை யிவணிடை யிருத்தல் வேண்டி

     யோதுதல் பழுதென் றோதி யுழையின மனைத்துந் தேற்றிக்

     காதலிற் கலையைப் போற்றிக் கன்றினை யதன்பாற் சேர்த்திப்

     பேதுற லெனப்பா லூட்டி யெழுந்தது பிணையு மன்றே.

59

      (இ-ள்) இவைக ளியாவையு முணர்ந்தும் என்னை இவ்விடத்தின்கண் இருக்கவேண்டிச் சொல்லுதல் குற்றமென்று கூறி மான் கூட்டங்களெல்லாவற்றையும் தேறும்படிசெய்து அன்பைக் கொண்ட ஆண்மானைத் துதித்துக் குட்டியை அதனோடு சேர்த்து உங்களின் புத்தியானது மயங்க வேண்டாமென்று கூறிக் குட்டிக்கு அமுதமுண்பித்து அந்தப் பெண்மானும் எழும்பிற்று.

 

2111. இனத்தினை விடுத்து நீங்கி யிருங்களிப் பிதயம் பூப்ப

     வனத்தினி லேகுங் காலை மறிமுன மறிப்பச் சீறிச்

     சினத்தது தடுப்ப வோடிச் செவ்விமான் முகத்தை நோக்கி

     யினித்தவாய் புற்றீண் டாத விளமறி யுரைக்கு மன்றே.

60

      (இ-ள்) அவ்வாறு தனது கூட்டத்தை விட்டு மகன்று பெரிய சந்தோஷ மானது மனதின்கண் உண்டாகும் வண்ணம் கானகத்தினிடத்துச் செல்லுகின்ற சமயத்தில் கன்றானது முன்னே மறிக்க அப்பெண்மான் சீற்ற முற்றுக் கோபித்து அக்கன்றைத் தடுக்க, இனிக்கப் பெற்ற வாயினாற் புல்லைத் தொடாத இளமறியாகிய அக்கன்றானது ஓடி அழகிய அப்பெண் மானின் வதனத்தைப் பார்த்துச் சொல்லத் தொடங்கியது.