பக்கம் எண் :

சீறாப்புராணம்

785


முதற்பாகம்
 

2112. மாதவம் பெற்று நின்போன் முகம்மது நபிதஞ் செய்ய

     பாதபங் கயத்தைக் கண்டு பரிவுட னீமான் கொண்டு

     போதலே யன்றி நின்னைப் புறத்தினி லகற்றி வாழே

     னீதுமுத் திரையென் றோதி யெழுந்துமுன் குதித்த தன்றே.

61

      (இ-ள்) உன்னைப் போலும் மகத்தாகிய தவத்தைப் பெற்று நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சிவந்த சரணங்களான தாமரை மலரைப் பார்த்து அன்போடும் ஈமான் கொண்டு போவதே யல்லாமல் உன்னைப் பக்கத்தில் நீக்கி விட்டு நான் உயிர் வைத்து வாழ மாட்டேன். இஃது முத்திரையென்று கூறி எழும்பி முன்னே சாடிற்று.

 

2113. இறையவன் றூதைக் கண்ட வதிசய மிதுகொ லென்ன

     மறிமன மறுகி லாது வதைதனைப் பொருந்திச் சேற

     லிறுதியற் றின்ப நம்பா லெய்துமென் றகத்தி னெண்ணிச்

     செறிவனங் கடந்து வேடன் றிசைதனை யடுத்த தன்றே.

62

      (இ-ள்) அவ்வாறு இஃது இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதுவர் நாயகம் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்த ஆச்சரியமென்று தனது குட்டியின் மனமானது மறுகாது கொலையைச் சம்மதித்துச் செல்லுவதினால் நம்மிடத்தில் இன்பமானது முடிவற்று வந்து சேருமென்று மனசின் கண் நினைத்து நெருங்கிய கானகத்தைத் தாண்டி அவ் வேட்டுவனது திசையைச் சமீபித்தது.

 

2114. குருளையும் பிணையுங் கூடி வருவது குறித்து நோக்கி

     முருகலர் புயத்தார் வள்ளன் முகம்மது மகிழ்ந்தன் பாக

     விருளுறு மனத்த னான வேடனை யினிது கூவி

     யொருபிணைக் கிரண்டுன் பாலில் வருவதென் றுரைத்திட் டாரால்.

63

      (இ-ள்) அப்போது வாசனையைக் கொண்ட புஷ்பமாலையைத் தாங்கிய தோள்களையுடைய வள்ளலான நமது நாயகம் எம்மறைக்கும் தாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் குட்டியும் அப்பெண் மானும் தம்மிற் கூடி வருவதைக் குறிப்பாய்ப் பார்த்துச் சந்தோஷித்து அந்தகார மமைந்த அகத்தை யுடையவனாகிய அந்த வேட்டுவனை அன்பாக இனிமையுடன் அழைத்து உன்னிடத்தில் ஒரு மானுக்கு இரண்டுமான் வருகின்றனவென்று கூறினார்கள்.