பக்கம் எண் :

சீறாப்புராணம்

819


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், சிறப்பை யுடைய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் வயிற்றி லறைந்துக் கொண்டு இரங்கவும், பரிசனத்தவர்களான யாவர்களும் மிகவும் துடித்து ஏங்கவும், மன்னர்களாகிய அனைவர்களும் வந்து நெருங்கி அபீத்தாலி பென்பவரின் சரீரத்தை எடுத்து ஸ்நானஞ் செய்வித்து ஷறகினது நேர்மையைக் கொண்ட ஒழுங்கில் அடக்கஞ் செய்தார்கள். சடங்குகளையுஞ் செய்து நிறைவேற்றினார்கள்.

 

2202. பெரிய தந்தைய ரிறந்திடும் பருவரல் பெருகி

     யரிய நாயகன் றூதுவ ரகத்தினி லழுங்கி

     வரிகொள் வண்டிமிற் செம்மலர் மரைமுகம் வாடி

     யுரைதெ ரிந்திலர் போலிடைந் தகத்துறைந் திருந்தார்.

11

      (இ-ள்) அருமையான நாயக னாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் தூதுவ ரான நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் பெரிய பிதாவாகிய அபீத்தாலி பென்பவர் உயிர் துறந்து துன்பமானது அதிகரித்து மனசின்கண் அழுங்குதலுற்று இரேகைகளைக் கொண்ட வண்டுகளானவை ஒலியா நிற்கும் சிவந்த தாமரை மலர் போலும் முகமானது வாட்ட மடைந்து வார்த்தை தெரியாதவர்களைப் போல வருந்தித் தங்களினது மாளிகளையின் கண் தங்கி யிருந்தார்கள்.

 

2203. அகத்தி னிற்பெருந் துன்பொடு மிருக்குமூன் றாநாள்

     வகுத்த நாயகன் விதிவழி குவைலிது மகளா

     ரிகத்தி னிற்புகழ் நிறுத்திவிண் ணகம்புக ழிலங்கத்

     தகுத்தொ டும்பெரும் புதுமையிற் றிருவடி சாய்ந்தார்.

12

      (இ-ள்) அவ்வாறு மனசின்கண் பெரிய வருத்தத்தோடும் இருக்கின்ற மூன்றாம் நாளில் யாவற்றையும் வகுத்த நாயகனான ஜல்லஜலாலகு வத்த ஆலாவின் விதியினது ஒழுங்கில் குவைலிது அரசனின் புதல்வியராகிய கதீஜா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் இவ்வுலகத்தின்கண் தங்களின் கீர்த்தியை நிற்கும்படி செய்து வானலோகத்தினிடத்து புகழானது பிரகாசிக்கும் வண்ணம் தகுத்துடன் பெரிய ஆச்சரிய்த்தில் உயிர் துறந்தார்கள்.

 

2204. முடிவி லாதவன் றூதுவர் முகம்மது நபிக்கு

     வடிவ மைந்தமெய்த் துணைவியாய் மகிதலத் திருந்து

     கடிகொள் பொன்னக ரத்தினிற் கதிர்கொண்மா ளிகையிற்

     குடிபு குந்தனர் கத்தீசா வெனுங்குலக் கொடியே.

13