பக்கம் எண் :

சீறாப்புராணம்

825


முதற்பாகம்
 

2217. உன்னு நன்மறை முதற்கலி மாவெடுத் துரைத்துன்

     றன்னை நல்வழி யவனெனுந் தகைமையிற் படுத்தி

     மன்னுந் தீனிலை விரித்தறம் வளர்த்திட வேண்டிற்

     றென்னு ளமதி னடைந்தனென் றுரைத்தன ரிறசூல்.

10

      (இ-ள்) றசூலாகிய நாயகம் நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் நினையா நிற்கும் நன்மை பொருந்திய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது முதன்மை யான கலிமாவை எடுத்துக் கூறி உன்னை நல்ல சன்மார்க்கத்தையுடையவனென்று கூறும் தன்மையிற் படுத்திப் பொருந்திய தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமையை விரியச் செய்து புண்ணியத்தை வளர்க்கும் வண்ணம் எனது மனமானது வேண்டிற்று. அதனால் இங்கு வந்து சேர்ந்தேனென்று கூறினார்கள்.

 

2218. கதிர்தி ரண்டுரு வெடுத்தவ ருரைத்தகட் டுரைகேட்

     டதிவி தத்தொடு நன்கெனச் சிரங்கர மசைத்துப்

     புதிய மாமறைக் கையமி லெனப்புகழ் படுத்தி

     மதியின் வேறுவைத் திசைந்திடுஞ் சிலமொழி வகுப்பான்.

11

      (இ-ள்) பிரகாச மனைத்தும் ஒன்றாய்க் கூடி ஒரு சொரூபத்தை எடுக்கப் பெற்றவராகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு கூறிய உண்மையான வார்த்தைகளை அந்த இபுனு அப்து யாலி லென்பவன் தனது காதுகளினாற் கேள்வியுற்று அதிக விதத்துடன் நல்லதென்று தலையையும் கைகளையும் அசையும்படி செய்து நூதன மாகிய மகத்தான வேதத்திற்குச் சந்தேகமில்லை யென்று துதிசெய்து தனது புத்தியின்கண் வேறே யொன்றை வைத்துக் கொண்டு பொருந்திய சிலவார்த்தைகளை வகுத்துக் கூறுவான்.

 

2219. எடுத்து ரைத்தவை யென்னினத் தவர்க்கெடுத் தியம்பி

     யடுத்தி ரண்டொரு தினத்தினும் மிடத்தினி லணுகி

     வடித்த வாய்மையி னொழுகுவன் மறைதெரி மதியோய்

     படித்த லம்புகழ் நகரினிற் செலுமெனப் பகர்ந்தான்.

12

      (இ-ள்) வேதங்களை யுணர்ந்த அறிவைக் கொண்ட முகம்மதென்னுந் திருநாமத்தை யுடையவரே! நீவிர் எடுத்துக் கூறியவைகளை எனது பந்துக்களுக்கு எடுத்துச் சொல்லிச் சமீபித்து இரண்டொரு நாளையில் உம்மிடத்தில் வந்து தெளிந்த உமது வார்த்தைகளின்படி வழிப்பட்டு நடப்பேன். இவ்வுலக மானது துதியா நிற்கும் உமது ஊராகிய திருமக்கமா நகரத்திற்குச் செல்லு மென்று கூறினான்.