பக்கம் எண் :

சீறாப்புராணம்

83


முதற்பாகம்
 

அஷ்டதிசை நிலை கொண்ட மலைகளோடு விம்மலாற் பகைக்கா நிற்கும் தனபாரங்களையுடைய பெண்கள் காட்சியினாலுற்ற பெரிய மயக்கத்தினாலே அவர்களது சிந்தையும் கூர்மை தங்கிய விழிகளாகிய வண்டுகளோடு தேனுகர் வண்டுகளும் உறையும் பூமாலையணிந்த மார்பினையுடையவர்.

 

169. கொன்னுனை வெண்ணிறக் கோட்டு வாரணச்

    செந்நிறக் குரிதியிற் றிமிர்ந்து வாய்கழீஇ

    மின்னவிர் கணமணி விளங்கு மாமுடி

    யொன்னல ருயிரைமேய்ந் துறங்கும் வேலினார்.

4

     (இ-ள்) கொலைத் தொழிலிற் பழகுங் கூரிய நுனியையும் வெள்ளிய பிரகாசத்தையு முடைய தந்தங்களையுற்ற யானைகளினது சிவந்த நிறந்தங்கிய இரத்தத்தினால் வாயைச் சுத்திசெய்து ஒளிவீசும் இரத்தின வருக்கங்கள் விளங்காநின்ற மகத்துவம் பொருந்திய மகுடம்புனைந்த சத்துருக்களின் ஆத்துமங்களை மேய்ந்து திமிர்கொண்டு துயிலாநிற்கும் வேலினையுடையவர்.

 

170. முடங்கலங் கைதைமுள் ளெயிற்று வெண்பணிப்

    படங்களா யிரத்தினும் பரித்த பாரெலா

    மிடங்கொள்பூ தரப்புயத் திருத்தி யேதிலார்

    மடங்கலே றெனுமன வலியின் மாட்சியார்.

5

     (இ-ள்) தாழையினது மடங்குதலாகிய வழகிய முட்போலும் வெண்மை பொருந்திய விடப்பற்களையுடைய ஆதிசேடன் தனது படாமுடிகளாயிரத்தானும் சுமந்திரா நின்ற பூலோக முழுவதையும் விசாலமுற்ற மலைபோலும் தமது புயத்தின் கண்ணிருத்தியவர் அன்றியும் மதங்கொண்ட யானைகளையொத்த சத்துராதிகளுக்கு ஆண்சிங்கமென்று சொல்லும்படியான மனவன்மையின் பெருமையை யுடையவர்.

 

171. மாக்கட னெடும்புவி வளைந்த வன்கலி

    நீக்கிய வெண்குடை நீழ லோம்புவோர்

    வீக்கிய கழலடி வேந்தர் பொன்முடி

    தாக்கிய மருச்செழுங் கமலத் தாளினார்.

6

     (இ-ள்) பெரிய கடலாற் சூழப்பட்ட நெடிய பூமியை எவ்விடத்தும் வளைந்த தரித்திரியத்தை நீக்கின வெள்ளைக் குடையினது நிழலாற் காப்பவர், அன்றியும் வீரகண்டாமணியைக் கட்டின அடிகளையுடைய வரசர்களது பொன்னாலாய மகுடங்களை யுதைத்த தழும்பினையுடைய செழியதாமரை மலர் போலும் பாதங்களையுடையவர்.