பக்கம் எண் :

சீறாப்புராணம்

832


முதற்பாகம்
 

2240. மிக்க வன்குபிர்க் கொலைத்தொழின் மனத்தினை விடுத்திட்

     டிக்க ணத்தினல் வழிப்படா ரெனிலிவர் பயந்த

     மக்க ளாயினு நல்வழிக் கொழுகு வர் மறையுந்

     திக்க டங்கலும் பரந்துதீ னெறிமுறை செயுமே.

33

      (இ-ள்) அன்றியும், அதிகரித்த கொடிய குபிராகிய கொலைத் தொழிலைக் கொண்ட இருதயத்தை விட்டு இக் கணத்தில் நன்மை பொருந்திய சன்மார்க்கத்தி லுட்படாரே யானால் இவர்கள் பெற்ற புத்திரர்களாயினும் நல்ல மார்க்கத்தில் வழிப்பட்டு நடப்பார்கள். புறுக்கானுல் அலீமென்னும் வேதமும் எல்லாத் திசைகளிலும் பரவித் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தினது முறைமையைச் செய்யா நிற்கும்.

 

2241. வான நாயக னேவலுக் குரியவ மகிழ்வின்

     யானி னைத்திடும் பொழுதினில் வருகவிற் றையினுந்

     தான மீதினிற் செல்கவென் றிசைத்தனர் தளரா

     தான செய்கையீ தெனவெழுந் தனர்மலைக் கரசர்.

34

      (இ-ள்) அன்றியும், வானலோகத்தினது நாயகனாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் ஏவற்றொழிலுக்குச் சொந்தமானவரே! சந்தோஷத் தோடும் நான் சிந்திக்குஞ் சமயத்தில் வருவீராக இன்றைய தினத்தில் உமது தானமாகிய இருப்பிடத்திற்குப் போகுமென்று கூறினார்கள். உடனே பருப்பத இராஜாவாகிய அந்த மலக்கானவர் தளர்ச்சி பெறாதான தொழில் இஃதென்று எழும்பினார்.

 

2242. உள்ள மீதிலன் பொடுநபிக் குயர்சலா முரைத்து

     வெள்ளி டைப்படர்ந் தவணடைந் தனர்மலர் விரிந்து

     கள்ள லம்பிய பொழில் செறி கர்னுத ஆலிப்

     வள்ள லாரிருந் தனர்புவி யிடையெழு மதிபோல்.

35

      (இ-ள்) அவ்வாறு எழும்பி அவர் மனசின்கண் கிருபையோடு நாயகம் நபிகட் பெருமானார் நபி ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்கு மேலான சலா மோதி வெள்ளிய தானத்தில் படர்தலுற்று அந்த வானலோகத்தின்கண் போய்ச் சேர்ந்தார். வள்ளலா ராகிய நபிகணாயகமவர்கள் புஷ்பங்களானவை மலர்ந்து நறவமானது அலம்பப் பெற்ற சோலைகள் நெருங்கிய கருனுதாலி பென்னு மிடத்தில் பூமியின்கண் எழா நிற்கும் சந்திரனைப் போலு மிருந்தார்கள்.