பக்கம் எண் :

சீறாப்புராணம்

835


முதற்பாகம்
 

      (இ-ள்) செந்நிறத்தைக் கொண்ட மாமிசத்தை அள்ளுகின்ற இலைகளைப் பெற்ற வேலாயுதத்தை யுடையவரே! அடியேனாகிய யான் நடுவென்று சொல்லா நிற்கும் இந்தப் பூமியினிடத்து ஆதியில் வந்த நசுறானி மார்க்கத்தி லுள்ளவன் நீனவாவென்று கூறிய நகரத்தின் கண்ணுள்ளவன். கல்வியிற் சிறந்தவனான இறபிஆ வென்பவனின் அழகிய வீட்டினது வேலைக்காரன். அத்தா சென்னும் நாமத்தை யுடையவனென்று கூறினான்.

 

2249. விரிந்தமுன் மறைக டேர்ந்து மெய்ந்நெறி முறைமை நாளும்

     பிரிந்திடா துறையூ னூசு நபியெனும் பெயரின் வள்ள

     லிருந்தவூ ரவனோ வென்றா ரினிதின்முன் னவரை யின்னோர்

     தெரிந்தவா றெவ்வா றென்னச் சிந்தையுட் சிந்தித் தானே.

7

      (இ-ள்) அவன் அவ்விதம் கூற நபிகட் பெருமானாரவர்கள் விரிவைக் கொண்ட முன்னுள்ள வேதங்களைத் தெளிந்து சத்தியமாகிய மார்க்கத்தினது ஒழுங்கைப் பிரதி தினமும் பிரியாது கூறிய நபியூனூ சலை கிஸ்ஸலா மென்னுந் திருநாமத்தை யுடைய வள்ளலானவர் தங்கிய நகரத்தை யுடையவனா? என்று கேட்டார்கள். அதனால் அவன் முன்னவராகிய அவரை இவர் இனிமையுடன் அறிந்த வழி எவ்வாறென்று தனது மனசின்கண் கருதினான்.

 

2250. பொன்னுல கமரர் போற்றப் பூவிடை யிருந்த யூனு

     சென்னுநன் னபியை நீவி ரெவ்வண்ண மறிவீ ரென்ன

     நன்னிலை யொடுமத் தாசு நவின்றனன் வணங்கி லாத

     மன்னவர்க் குருமே றென்ன வருமுகம் மதுபின் சொல்வார்.

8

      (இ-ள்) அவ்வாறு கருதிய அத்தா சென்பவன் சொர்க்க லோகத்தின் கண்ணுள்ள தேவர்களான மலாயிக்கத்துமார்கள் துதிக்கும் வண்ணம் இந்தப் பூலோகத்தினிடத்து இருந்த யூனுசு அலைகிஸ்ஸலா மென்னும் நன்மையைக் கொண்ட நபியவர்களை நீவிர் நல்ல நிலைமையோடும் எவ்வித முணர்வீ ரென்று கேட்டான். பின்னர் பணியாத அரசர்களுக்கு இடியேற்றைப் போன்று வரா நிற்கும் நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கூறுவார்கள்.

 

2251. படியிடத் தினில்யூ னூசு நபியெனும் பட்டம் பெற்றோர்

     நெடியவன் றூத ரியானு நபியெனு நிலைமை பெற்றேன்

     வடிவுளோ யதனா லெற்கு மன்னுயிர்த் துணைவ ராகு

     மடனபி மாரு மென்றா ராரணங் கிடந்த வாயார்.

9