பக்கம் எண் :

சீறாப்புராணம்

840


முதற்பாகம்
 

2261. மக்கடங் குழுவின் வைகிமந்திரத் தலைவர் சூழ

     மிக்கசின் சிலதைக் கூவி விறன்முகம் மதுவை நீவிர்

     இக்கணத் திற்றைப் போதி லெவ்விடத் துறைந்தா ரென்றென்

     பக்கலி லுரைப்ப நோக்கி வம்மெனப் பரிவிற் சொன்னான்.

7

      (இ-ள்) புத்திரர்களின் கூட்டத்தில் மந்திரத் தலைவர்கள் வளையும் வண்ணம் தங்கி யிருந்து கொண்டு மேன்மையை யுடைய சில ஜின்களை யழைத்து நீங்கள் வெற்றியைக் கொண்ட முகம்மதென்பவரை இன்றைய பொழுதினது இந்தச் சமயத்தில் எந்த ஸ்தானத்தில் தாமதித் திருக்கிறாரென்று பார்த்து என்னிடத்தில் கூறும்படி வாருங்களென்று அன்போடுஞ் சொன்னான்.

 

2262. அருந்தவந் தவறி நின்ற வரசனீ துரைப்பக் கேட்டுப்

     பெருந்தொகைக் குழுவி னோடும் பெரி தெழுந் தாழிசூழ

     விருந்தவை யகத்தி காந்த மெட்டினுந் தேடிச் சென்று

     பிரிந்ததி லொன்பான் சின்கள் பேரற படைந்த வன்றே.

8

      (இ-ள்) அருமையான தவத்தில் நின்றுந் தவறி நின்ற மன்னவனாகிய அந்த இபுலீசென்பவன் இந்த வார்த்தைகளை அவ்வாறு சொல்லக் கேள்வியுற்றுப் பெரிய தொகையைக் கொண்ட கூட்டத்தோடும் பெரிதா யெழும்பிச் சமுத்திரமானது வளையும் வண்ணம் இருக்கப் பெற்ற இந்தப் பூமியினது எட்டுத் திசைகளின் முடிவுகளிலும் விசாரித்துப் போய் அதில் ஒன்பது ஜின்கள் பிரிந்து பெரிய அறபு தேசத்தைப் போய்ச் சேர்ந்தன.

 

2263. அற்றையிற் பொழுதி ராவில் ரகசியத் தொழுகை யன்பாய்

     முற்றுற முடித்து வள்ளன் முதலவன் றன்னை யேத்திக்

     குற்றமற் றிரந்து நின்ற வசனத்தின் குறிப்புக் காதி

     னுற்றடுத் தொருங்கு நோக்கி யோரிடத் துறைந்த வன்றே.

9

      (இ-ள்) அவ்வாறு போய்ச் சேரவே வள்ளலாகிய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அன்றைய தினபொழுதில் இராக்காலத்தில் அன்பாக இரகசியத்தைக் கொண்ட தொழுகையை முடியும்படி தொழுது நிறைவேற்றி யாவற்றிற்கும் முதன்மையை யுடையவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவைப் புகழ்ந்து களங்க மில்லாது வேண்டி நின்ற வார்த்தைகளின் குறிப்பானது காதுகளிற் பொருந்தி நெருங்கி ஒழுங்காகப் பார்த்து ஓரிடத்தில் தங்கியிருந்தன.

 

2264. தரிப்பொடுந் துவாவை யோதித் தனிநகு லாவி னோர்பால்

     விருப்பொடு மிரப்பக் கேட்டு மிகமகிழ்ந் திதய நோக்கி

     யிருப்பது நபியே வாய்க்கொண் டிசைப்பது புறுக்கா னென்னத்

     திருப்புதற் கரிதாய் நின்று சின்கண்மெய் சிலிர்த்த வன்றே.

10