பக்கம் எண் :

சீறாப்புராணம்

847


கடத

முதற்பாகம்

 

2282. கடத்தின்மா னுரைப்ப நின்ற காரணக் குரிசி றூரத்

     திடத்தினி னின்ற வஞ்சித் தருவினை யெதிர்ந்து நோக்கி

     படித்தலத் துறைந்த வேரின் பற்றறா தெழுந்து வெற்பி

     னடுத்திவண் வாவென் றின்ப வமுதவாய் திறந்து சொன்னார்.

28

      (இ-ள்) காட்டின் கண்ணுள்ள மானானது உரைக்கும்படி நின்ற காரணத்தை யுடைய குரிசிலான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தொலையிற் றிடத் தோடும் நின்ற ஒரு வஞ்சி மரத்தை எதிர்த்துக் கண்களினாற் பார்த்துப் பூமியின்கண் தங்கிய வேர்களினது பற்றானது அற்றுப் போகா தெழும்பி மலையைச் சமீபித்து இவ்விடத்தில் வருவாயாக வென்று இனிமையையுடைய அமுத வாயைத் திறந்து கூறினார்கள்.

 

2283. பாசடை குழைத்த வஞ்சித் தருபடி துளைத்துள் ளோடி

     வீசிய கவட்டுச் சில்லி வேரிலொன் றறாத வண்ண

     மாசற வெழுந்து செவ்வி முகம்மதின் பாத நோக்கிக்

     காசினி யிடத்திற் றோயக் கவின்பெறப் படிந்த தன்றே.

29

      (இ-ள்) அவ்வாறு கூறப் பசிய தழைகளைக் குழைக்கப் பெற்ற அந்த வஞ்சி மரமானது பூமியைத் துளைத்து அகத்திலோடி எறிந்த கவட்டினது சில்லி வேர்களில் ஒன்றும் அறாத வண்ணம் குற்றமற எழும்பி அழகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் திருவடிகளைப் பார்த்து இப்பூமியின்கண் தோயும்படி அழகு பெறப் படிந்தது.

 

2284. பலனுறுங் கலிமாத் தன்னைப் பணரெனும் பலகை யார

     நிலைபெறு மறபி னானன் னெடுநிலத் தெழுதிச் சின்கள்

     குலனொடு மினிது காணக் கொழுந்தழை குழைய வூர்ந்து

     கலைமுகம் மதுதம் முன்கண் களித்திட நின்ற தன்றே.

30

      (இ-ள்) அன்றியும், பிரயோசனத்தைப் பொருந்தப் பெற்ற கலிமாவைக் கிளைகளென்று கூறும் பலகைகளினாற் பொருந்தும்படி நிலைபெற்ற அறபிப் பாஷையினால் நல்ல நெடிய இந்தப் பூமியின்கண் வரைந்து அந்த ஜின்கள் தங்கள் கூட்டத் தோடும் இனிமையுடன் பார்க்கும் வண்ணம் செழிய தழைக ளானவை குழைய நகர்ந்து புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தையுடைய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் முன்னர் கண்களானவை களிக்க நின்றது.