பக்கம் எண் :

சீறாப்புராணம்

848


முதற்பாகம்
 

2285. நின்றமா மரத்தை நோக்கி நெறிபட வெவருங் கேட்ப

     வின்றெனை யிவர்கட் கின்னா ரெனவெடுத் தியம்பு கென்ன

     மன்றலங் குரிசில் கூற மலரிலை குலுங்க வாடா

     வென்றிகொ ளிறையோ னுண்மைத் தூதென விளம்பிற் றன்றே.

31

      (இ-ள்) அவ்வாறு நின்ற மகத்தாகிய அந்த மரத்தைப் பார்த்து அழகிய வாசனையை யுடைய குரிசிலான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் ஒழுங்காக யாவர்களுந் தங்களின் காதுகளினாற் கேட்கும்படி இன்றைய தினம் என்னை இவர்களுக்கு இன்னா ரென்று விட்டுக் கூறுவாயாக வென்று சொல்லத் தனது புஷ்பங்களும் இலைகளும் குலுங்கும் வண்ணம் சோராத வெற்றியைக் கொண்ட இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் மெய்மையாகிய றசூ லென்று கூறிற்று.

 

2286. சாடினி தெழுந்து வந்து தவறிலா துரைத்த மாற்றங்

     கூடிய சின்க ளெல்லாஞ் செவிமனங் குளிரக்கேட்டு

     நீடிய வுவகை யென்னு நெடுங்கட னீந்தி நீந்தித்

     தேடிய பொருளி தென்னச் சேவடி சிரசிற் கொண்ட.

32

      (இ-ள்) அந்த மரமானது குதித்து இனிமையுட னெழும்பி வந்து குற்ற மில்லாது அவ்வாறு கூறிய வார்த்தைகளை அங்கு கூடிய ஜின்கள் யாவும் தங்களின் காதுகளும் இருதயமும் குளிர்ச்சி யடையும்படி கேள்வியுற்று நீண்ட சந்தோஷ மென்னும் நெடிய சமுத்திரத்தில் நீந்தி நாம் தேடிய பொருள் இஃதென்று சிவந்த பாதங்களைத் தங்களின் தலைமேற் கொண்டன.

 

2287. சீ்தமென் கவிகை நீழற் றிருநபி யிறசூ லுல்லா

     பாதபங் கயத்தை முத்திக் கண்மலர் பரிவிற் சாத்திக்

     கோதறுங் கலிமா வோதிக் குழுவொடு மீமான் கொண்டு

     வேதநன் னிலைமை நீங்கா மெய்நெறி மேவி நின்ற.

33

      (இ-ள்) அன்றியும், மெல்லிய மேகக்குடையினது நிழலை யுடைய தெய்வீகந் தங்கிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சரணங்களாகிய தாமரை மலரை மோந்து கண்களான புஷ்பத்தை அன்போடும் சாத்தித் தங்களின் கூட்டத்துடன் குற்றமற்ற லாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹி யென்னும் கலிமாவைச் சொல்லி ஈமான் கொண்டு புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது நல்ல நிலைமையானது மாறாத சத்திய மார்க்கத்தைப் பொருந்தி நின்றன.