பக்கம் எண் :

சீறாப்புராணம்

86


முதற்பாகம்
 

     காசி னிக்கர சியற்றுதுல் கறுனையின் கால

     மாசி லாக்கணக் கெட்டுநூற் றெண்பத்தோர் வருடம்.

14

     தமது வெள்ளிய குடையின்கீழ் தெள்ளிய அலைகளை யெறியாநிற்கும் சமுத்திரங்களும் மலைகளும் அடங்கும்படி குற்றமேது மில்லாத சிங்காசனத்தின்கண் வீற்றிருந்த சிக்கந்த ரென்னுமியற் பெயரையும் துல்கறுனையினென்கிற காரணப் பெயரையுமுடைய சக்கிரவர்த்தியானவர் பூமிக்கு அரசுசெய்யுங் காலத்தின் மறுவற்ற கணக்கிலே எண்ணூற்றெண்பத் தோரு வருடம்.

 

180. கரைத்த மின்றெளித் தெழுத்தெனச் சிறக்குமக் காவி

    னிரைத்த கார்க்குலந் திரண்டெனக் களிறுக ணெருங்கி

    யிரைத்த டர்ந்துமும் மதங்களை வாரிநின் றிறைத்து

    வரைக்கு லங்கள்போல் வந்ததற் கொருமுதல் வருடம்.

15

     கரைக்கப்பட்ட மின்னைத் தெளியச் செய்து எழுதிய சித்திரம்போலும் சிறக்காநிற்கும் மக்காவென்கிற பட்டணத்தின் கண் நிரைபடுத்திய கருமேகசாலங்கள் திரண்டாற்போல யானைகள் ஒன்றோடொன்று நெருங்கி ஆரவாரித்து பின்னுறாது முன்னே யேறிநின்று கன்னம் கபோலம் கோசமென்கிற மூன்று மதங்களையும் அள்ளிச் சொரிந்து மலைக்கூட்டங்களைப் போன்று வந்ததாகிய யானைக் கலகத்திற்கு ஒன்றென்று சொல்லும் முதலாம் வருடமான அவ்வருடத்தில்.

 

181. திங்க ளாமிற சபுமுதற் றேதிவெள் ளியிராத்

    துங்க வார்கழன் முகம்மது பேரொளி துலங்கி

    யெங்க ணாயக ரப்துல்லா நுதலிடத் திருந்து

    மங்கை யாமினா வயிற்றினிற் றரித்தன வன்றே.

16

     பன்னிரண்டு மாதங்களி லொருமாதமாகும் றஜபு மாதத்தின் முதலாந் தேதியான வெள்ளிக்கிழமையிரவிலே பரிசுத்தமும் நேர்மையுமான பாதங்களையுடைய நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களது பெரிய வொளியானது தமது மாட்சிமையோடும் பிரகாசித்து எங்கட்குத் தலைவரான அப்துல்லாவினது நெற்றியின் கண்ணிருந்து மூன்றாம் பருவப் பெண்ணாகிய ஆமினா அவர்களினது வயிற்றின்கண் தரிபட்டது.

 

182. திருத்தும் பொன்னக ரமரரே திரண்டவா னவரே

    கருத்தி னுண்மகிழ்ந் தெவ்வையு மலங்கரித் திடுமின்

    வருத்த மென்றிலா முஹம்மதை யாமினா வயிற்றி

    லிருத்தி னேனென வுரைத்தன னியாவர்க்கு மிறையோன்.

17