பக்கம் எண் :

சீறாப்புராணம்

865


முதற்பாகம்
 

      (இ-ள்) உண்மைப் பொருளைக் கொண்ட வேதங்களுக்கு நாயகமாகிய பொருளானவரே! தேவர்களான மலாயிக்கத்துமார்களின் ஜீவனுக்கு ஜீவ னானவரே! அடியே னாகிய யான் இந்தப் பூலோகத்தின்கண் உங்கள்பால் அடைக்கலம். எனது காலினது விரல்களைக் கட்டி என் வல்லமையின் வீரத்தை வீசிய சாமர்த்தியத்தை யுடையவன் இதோ! சமீபித்து வந்தான். அவனைக் கொஞ்சும் தூரத்தில் நிற்கும் வண்ணம் கிருபை செய்து எனது கைகள் படும்படி உங்களின் கையைத் தந்து எனது ஜீவனைக் காப்பது உங்கள் கடமை யென்று சொல்லி அழுதான்.

 

2325. வெருவுறேல் காம்மா வெனக்கர மசைத்து

          விறற்புலி யலிதமை நோக்கி

     யெரிகதிர் வேலோய் நம்மிடத் தடைந்தோன்

          ஈங்கிவ னிடருறு மிணைத்தாட்

     பெருவிரற் றொடுப்பை விடுப்பையென் றினிதின்

          பெரியவன் றூதுவ ருரைப்ப

     வரியென மகிழ்ந்து நோக்கலுங் காற்கட்

          டற்றிடத் துன்பமு மறுந்த.

28

      (இ-ள்) அவ்விதம் அழவே பெரியவனான ஜல்லஷகுனகுவத்த ஆலாவின் தூதுவ ராகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் காம்மா வென்பவனே! நீ பயப்படேல்? என்று கூறித் தங்களின் கையையசைத்து விஜயத்தைக் கொண்ட புலியான அலிறலி யல்லாகு அன்கு அவர்களைப் பார்த்துப் பிரகாசியா நிற்கும் கிரணங்களைப் பெற்ற வேலாயுதத்தை யுடையவரே! இங்கு நம்மிடத்தில் வந்து சேர்ந்தவனாகிய இவனது துன்பத்தைப் பொருந்திய இரண்டு பாதங்களினது பெருவிரல்களின் கட்டை விடுப்பீராக வென்று இனிமையோடுங் கூற, அவர்கள் சிங்கத்தைப் போலும் களிப்படைந்து கண்களினால் பார்த்த மாத்திரத்தில் அந்தக் கட்டானது அற வருத்தமும் அற்றது.

 

2326. காற்றளை யகலப் பயங்கர மகற்றிக்

          காவலர் முகம்மதை யிறைஞ்சிப்

     போற்றிநின் றமுத மெனுங்கலி மாவை

          யுரைத்துநல் வழியினிற் புகுந்து

     தேற்றுநன் மறையின் முதியரைப் புகழ்ந்து

          செவ்விய ரலிபதம் வழுத்தி

     மாற்றரும் வேடந் தனையும்விட் டொழிந்து

          மதிவலா னெனத்தனி நின்றான்.

29