பக்கம் எண் :

சீறாப்புராணம்

877


இரண்டாம் பாகம்
 

நிற்கும் மாலைகளைத் தரித்த தலைவர்களாகிய அப்பன்னிருவர்களும் தம்மை வளையும் வண்ணம் யாவற்றிற்கும் முதன்மையான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபி முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் விளக்கிய தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தை விருப்பமுற்று விரித்துக் காட்டினார்.

 

2357. இல்லகத் திருந்து தீனி னியன்மறை முறைவழாது

     சொல்லிய முசுயிபோடு தொடுப்புயத் தசுஅ தும்மோர்

     தொல்லிருள் கிடந்த தென்னச் சுடரவன் கதிர்பு காது

     பல்லிய மளிக ளார்க்கும் பன்மலர்க் காவிற் புக்கார்.

12

      (இ-ள்) மனையினக மிருந்து அவ்வாறு தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தின் இலக்கணத்தை யுடைய புறுக்கானுல் அலீமென்னும் வேத நெறி வழுவாமற் கூறிய முசுயி பென்பவரோடு மாலையை யணிந்த தோள்களை யுடைய அசுஅ தென்பவரும் சூரியனது கிரணங்கள் நுழையாமல் ஒப்பற்ற பழைய அந்தகாரமானது கிடக்கப் பெற்றதை யொத்த வண்டுகள் பல இராகங்களைப் பாடா நிற்கும் பல புஷ்பங்களையுடைய ஓர் சோலையின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2358. தண்டலை யிடத்திற் புக்கித் தடத்தின்சம் பரத்து ளாடிக்

     கொண்டொலுக் கவினச் செய்து குதாதனை வணங்கி யேத்தி

     மண்டலம் புரக்கும் வள்ளன் முகம்மது தமையும் போற்றி

     விண்டலை தடவுங் கோட்டுத் தருவின்வீற் றிருந்தா ரன்றே.

13

      (இ-ள்) அந்தச் சோலையின்கண் அவ்வாறு போய்ச் சேர்ந்து அங்குள்ள வாவியின் நீரில் ஸ்நானஞ் செய்து கொண்டு அழகாக உலவுஞ் செய்து அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவைத் தொழுது துதித்து இப்பூவுலகைக் காக்கா நிற்கும் வள்ளலாகிய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களையும் வாழ்த்தி ஆகாயத்தினது சிகரத்தைத் தடவுகின்ற கொம்புகளை யுடைய ஓர் மரத்தினது நீழலின்கண் வீறுடனிருந்தார்கள்.

 

2359. உரந்தனி யுருகி யாதி யுறுதிநா யகனுக் கன்பாய்ச்

     சிரந்தரை தீண்டத் தீனோர் செய்முறை வணக்கஞ் செய்தோர்

     மரந்தரு நீழல் வைகு மாந்தர்க டெரியா வண்ணங்

     கரந்ததி சயித்து நோக்கிக் கறுத்தொரு காளைநின்றான்.

14

      (இ-ள்) மன மானது அவ்வாறு ஒப்பறக் கரையப் பெற்று யாவற்றிற்கும் முதன்மையான உறுதியை யுடைய அல்லாகு