இரண்டாம் பாகம்
(இ-ள்) முசுயிபு, அசுஅ தென்னும்
அவ்விருவர்களும் சந்தோஷிக்கும்படி அவ்வாறு சொல்லி அழகிய புஷ்பங்களை யுடைய அந்தச் சோலையை
விட்டகன்று யாவர்க்கும் தெரியும் வண்ணம் ஈமான் கொண்ட மனதின்கண் மகிழ்ச்சி யுண்டாகவும்,
சிறந்த வாசனையை யுடைய இரு தோள்களும் பூரிக்கவும் அழகிய முகமானது மலர்த லுற்றுப்
பிரகாசிக்கவும், அவ்வுசைதென்பவர் வருவதைச் சஃதென்னும் அபிதானத்தையுடைய அரசனானவன்
பார்த்துத் தனது மனதினிடத்துக் கூறுவான்.
2384.
மடித்தித
ழதுக்கிக் காந்தி வாள்வல னேந்தி மீசை
துடித்திட வேகத்
தோடுஞ் சென்றனன் றுணர்ப்பைங் காவை
விடுத்துள
மகிழ்ச்சி கூர மெய்மயிர் சிலிர்ப்ப நம்பா
லடுத்தன னவணி
லுற்ற தறிகில மென்று நின்றான்.
39
(இ-ள்) இந்த
உசை தென்பவன் செல்லும் போது தனது இதழ்களை மடித்துப் பற்களினாற் கடித்துப் பிரகாசம்
பொருந்திய வாளாயுதத்தை வலது கையிற் றாங்கிக் கொண்டு மீசையானது துடிக்கும் வண்ணம்
கோபத்துடன் சென்றான். இப்போது பூங்கொத்துகளை யுடைய பசுமை தங்கிய அந்தச் சோலையை விட்டு
மனத்தினிடத்துச் சந்தோஷ மதிகரிக்கும்படி சரீரத்தின் கண்ணுள்ள உரோமங்கள் சிலிர்க்கும்
வண்ணம் நம்மிடத்துச் சமீபித்து வந்தான். ஆதலால் அவ்விடத்தி லுண்டான காரணங்களொன்றையும்
நாமறிந்திலோ மென்று நின்றான்.
2385.
இன்னணஞ் சகுது நெஞ்சத் தெண்ணிநின் றுலவுநேர
மன்னவ ருசைதும்
புக்கார் மாமரை வதன நோக்கி
மின்னிய
கதிர்வாட் டாங்கிப் போயது மீண்ட வாறும்
பன்னுக வென்றான்
கேட்டங் கவரெதிர் பகர்வ தானார்.
40
(இ-ள்) சஃதென்பவர் இந்தப் படியாகத் தனது மனதின் கண்ணினைத்து அவ்விடத்திற்றானே நின்றுலாவுகின்ற
போழ்து அரசராகிய உசைதென்பவரும் வந்து சேர, அவரின் பெருமை பொருந்திய தாமரை மலரை யொத்த
முகத்தைப் பார்த்து நீவிர் பிரகாசியா நிற்கும் ஒளிவினையுடைய வாளாயுதத்தை யேந்திக் கொண்ட
அச்சோலையின்கண் சென்றதையும் திரும்பி இங்கு வந்த வரலாற்றையும் கூறுவீராக வென்று கேட்டான்.
அதைக் கேள்வியுற்ற அந்த உசைதென்பர் பதிற் சொல்லத் தொடங்கினார்.
2386.
பொழிலிடைப்
புகுந்தே னின்ற புரவலர் தம்மைக் கண்டேன்
வழிவச மலது
வேறோர் வடுவருந் தகைமை காணேன்
மொழிவபின்
னொன்று கேட்டேன் முன்னவ னசுஅ தென்போன்
பழிபடக் கோறல்
வேண்டி வந்தனர் பகைஞ ரென்றே.
41
|