பக்கம் எண் :

சீறாப்புராணம்

887


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) யான் அந்தச் சோலையின்கண் போய் அங்கு நின்ற அரசர்களாகிய அந்த அசுஅ தென்பவனையும் முசுயி பென்பவனையும் பார்த்தேன். அவர்களிடத்தில் சன்மார்க்கத்தினது ஒழுங்கை யல்லாமல் வேறே யோர் குற்றமானது வாரா நிற்கும் தன்மையைக் கண்டிலன். பின்னவர் நுமது தமையனான அசுஅதென்பவன் நிந்தை யுண்டாகும் வண்ணம் கொலைத் தொழிலை விரும்பிச் சத்துராதிகளாகிய பனீ ஹாரிதாக் கூட்டத்தார்கள் வந்தார்களென்று சொல்லிய ஒரு வார்த்தையைக் காதுகளினாற் கேள்வியுற்றேன்.

 

2387. தாய்க்குமுன் னவடன் சேய்பாற் றரியல ரடைந்தா ரென்னும்

     வாய்க்கொளாக் கொடிய வெஞ்சொன் மனத்தினை வெதுப்பக் கண்க

     டீய்க்கொளச் சினந்து சீறிச் செங்கரம் பிசைந்து நக்கி

     மூக்கினில் விரலைச் சேர்த்தி முரணொடு மெழுந்து நின்றான்.

42

     (இ-ள்) தனது மாதாவின் தமக்கையினது புத்திரனாகிய அசுஅதென்னு மபிதானத்தை யுடைய தன் தமையனின் சார்பில் அவ்வாறு சத்துராதிகள் வந்து சேரந்தார்க ளென்று சொல்லும் வாய் கொள்ளாத கொடுமையை யுடைய வெவ்விய அவ் வார்த்தையானது சஃதென்பவனின் இருதயத்தைச் சுடக் கண்களில் நெருப்பானது பற்றும்படி கோபித் தொலித்துச் செந்நிறத்தையுடைய தனது கைகளை ஒன்றோடொன்று பிசைந்து சிரித்து மூக்கின்கண் கை விரலைச் சேர்த்து அமையாமையுட னெழுந்து நின்றான்.

 

2388. என்னுயிர்த் துணைவன் றன்மு னெதிர்ந்தவ ரியாவ ரேனும்

     பன்னரும் விசும்பி லாவி படவிடுத் திடுவ னென்னத்

     தென்னுறுங் கதிர்வா ளேந்திச் சீற்றமுன் னடப்பச் சென்றான்

     முன்னையூழ் விதியின் வண்ண முறைநெறி யறிகி லானே.

43

(இ-ள்) அவ்வித மெழுந்து நின்ற ஆதி காலத்தினது ஊழ் விதியின்படி ஒழுங்காகிய சன்மார்க்க நெறியை இன்னதென்றறியாதவனான அந்தச் சஃதென்பவன் எனது பிராணனுக்கொப்பான சகோதரனின் முன்னர் எதிர்த்தவர்க ளியாவ ராயினும் அவர்களி னுயிரைச் சொல்லுதற்கரிய ஆகாயத்தி னிடத்துப் போய் முட்டும் வண்ணம் அனுப்புவே னென்று அழகு பொருந்திய ஒள்ளிய வாளாயுத்தத்தைத் தாங்கிக் கொண்டு அச்சோலையை நோக்கிக் கோபமானது முன்னே செல்லத் தான் பின்னே சென்றான்.