பக்கம் எண் :

சீறாப்புராணம்

888


இரண்டாம் பாகம்
 

2389. செங்கதிர் வடிவாட் டாங்கிச் சென்றவன் றுடவை புக்கி

     யெங்கினுந் தெரிய நோக்கி யுகன்மரு வலரைக் காணான்

     பொங்கிய மன்ற றூங்கும் பொழிலிலவ் விருவர் தாமே

     தங்கியங் கிருப்பக் கண்டான் றனித்தவண் சார்ந்து நின்றான்.

44

     (இ-ள்) சூரியனைப் போலும் பிரகாசத்தை யுடைய கூரிய வாளாயுதத்தைக் கையிலேந்திக் கொண்டு அவ்வாறு சென்ற அந்த சஃதென்பவன் அச்சோலையின்கண் போய் நுழைந்து எவ்விடத்துத் தன்கட் பார்வைக்குத் தோற்றும்படி பார்த்துப் பகைமையினையுடைய அச்சத்துராதிகளைப் பாராதவனாக ஓங்கிய வாசனையை வீசா நிற்கும் அச்சோலையின்பால் அந்த முசுயிபும் அகஅ தென்பவரு முறைந் திருக்கித் தெரிசித்து ஏகனாய் அவர்க ளிருக்குமிடத்திற் போய் நின்றான்.

 

2390. இரைந்தளி சுழலுங் காவி லிருப்பவர் தம்மை நோக்கி

     விரைந்திவ ணகன்று வேற்றூர் புகுமிவை வினவி ரேற்சோ

     கருந்திட வுடலம் வீழ்த்தி யாருயிர் பறித்து நுங்கட்

     பெருந்தமர் தமக்குங் கூடப் பிழைவிளைத் திடுவன் மாதோ.

45

     (இ-ள்) அவ்வாறு போய் நின்ற அந்தச் சஃதென்பவன் வண்டுகள் சத்தித்து சுற்றா நிற்கும் அந்தச் சோலையின்கண் இருப்பவர்களான முசுயிபு, அசுஅ தென்ற இருவரையும் பார்த்து நீங்கள் இவ்விடத்தை விட்டுஞ் சீக்கிரமாய் நீங்கி மற்ற நகரங்களுக்குச் செல்லுங்கள். இச் சங்கதிகளைப் பற்றி ஏனென்று என்னிடத்திற் கேட்பீர்களானால் உங்களின் சரீரங்களைப் பேய்களுண்ணும் வண்ணம் விழச் செய்து அச் சரீரங்களில் நிறைந்த ஆவியைப் பிடுங்கி யுங்களது பெரிய பந்துக்களுக்குங் கூடந் தவறு செய்வேன்.

 

2391. சாற்றிய தெனது தம்பித் தமையனென் பதனி னானு

     மாற்றலர்க் கொருசொற் றன்மம் வகுத்தமர் மலைவ தென்னத்

     தேற்றுநல் லறிவோர் கூறுந் திறத்தினும் பொறுத்த தல்லாற்

     கூற்றெனும் பழியை நாணிக் கூறின னலனியா னென்றான்.

46

(இ-ள்) யான் இவ்வாறு கூறியது, நீங்கள் எனது பின்னவன் முன்னவனென்று சொல்வதினாலும் சத்துராதிகளுக்கு ஒரு புண்ணிய வார்த்தை சொல்லிப் போர் செய்தல் வேண்டுமென்று தெளியச் செய்யும் நல்ல அறிவினை யுடையோர்கள் புகலா நிற்கும் தகுதியாலும் இதுவரை சகித்தேனே யல்லாமல் கால னென்று கூறும் நிந்தை வார்த்தையைக் கருதிக் கூறின னல்லேனென்றுரைத்தான்.