பக்கம் எண் :

சீறாப்புராணம்

89


முதற்பாகம்
 

     (இ-ள்) இபுலீசுல்லஈன் சொல்லிய இவ்விதமான வசனத்தை அவன் புத்திரர்களெல்லோரும் கேட்டமாத்திரத்தில், தந்தாய்! இவ்வாறுற்ற ஆபத்திற்கு நாம் யாதுசெய்வோம் செய்யுமுபாயமொன்று மில்லையே யென்று சொல்லித் தடுமாற்றமடைந்து ஒவ்வொருவனும் தன்தன்மனத்துள் மிகவாகநொந்து அவரவர் வசிக்கும் தத்தம் திக்குகளிற்போய்ப் புகுந்தார்கள். இபுலீசென்பவனும் மனம்நொந்து திகைத்துத் தன்னிடத்தின் கண்மேவி இருந்தான்.

 

190. தரித்தி டுமுதற் றிங்களிற் றரைபுக ழாத

    முரைப்ப ராமினா கனவினி லுன்றிரு வுதரத்

    திருக்குஞ் சந்ததி வலிமையை யுடையதிவ் வுலகத்

    தருக்க னொப்பல நாமமு கம்மதென் றகன்றார்.

25

     (இ-ள்) நபிக ணாயக மவர்களின் பேரொளியானது அப்துல்லாவினது திருநுதலிடத்திருந்து மாதுசிரோமணி ஆமினாவினது மேலான கருப்பாசனத்தின்கண் மனிதாவதாரமாய் வருவான் வேண்டிக் கருவாகத்தரித்த முதலாமாதத்திலே ஆமினாவினது சொப்பனத்தில் பூமி முழுவதும் புகழாநிற்கும் மூலபிதாவான நபி ஆதமலை கிஸ்ஸலாமவர்கள் வந்து ஆமினா! உனது மேன்மைதங்கிய வயிற்றின்கண் அமைவுற்றிருக்கும் பிள்ளையானது வலிமையை யுரிமையாயுடையது. அதன் பிரகாசத்திற்குச் சூரியனு நிகரல்லன். அப்பிள்ளையின் பேரானது இவ்வுலகத்தில் முஹம்மதாகும் என்று சொல்லிப் போயினார்.

 

     191. கருப்பந் திங்களி ரண்டினி லாமினா கனவின்

         மருப்பு குங்குழல் வல்லிநின் வயிற்றினின் மதலை

         யருப்பும் வீறுடை யவர்பெயர் முகம்மதென் றதிக

         விருப்ப மாயிது றீசுநன் னபிவிளம் பினரே.

26

     (இ-ள்) பிரானவர்களைக் கருப்பமான இரண்டா மாதத்திலே ஆமினாவினது சொப்பனத்தில் நல்ல நபிப் பட்டம் பெற்ற இதுறீசு அலைகிஸ்ஸலாமவர்கள் வந்து நறுநாற்றம் புகாநிற்கும் கூந்தலையுடைய வல்லிக்கொடியாகிய ஆமினாவே! உன் வயிற்றின்கண் ணிருக்கின்ற பிள்ளையானவர் எவ்விடத்தும் தோன்றும்படியான பெருமையையுடையவர். அவரின் பெயராகிறது முஹம்மதா யிருக்குமென்று அதிக விருப்பமாகத் திருவாய் மலர்ந்தருளினார்கள்.

 

     192. இக்கெ னுமொழி யாமினாக் கினிதுறத் திங்கள்

         புக்கு மூன்றினி னூகுநன் னபிமனப் பொலிவாய்

         மிக்க வுண்மையும் விளங்கிய வெற்றியு முடையோர்

         தக்க பேர்முகம் மதுவெனச் சாற்றிவிட் டகன்றார்.

27