இரண்டாம் பாகம்
2398.
என்னுயிர்த் துணைவ நின்னை
யிருங்கொலை நினைத்தே னென்ன
முன்னிருந் திருக ணாலி
கலுழ்தர மொழிந்து முன்னோன்
பொன்னடி பரவி யிந்தப்
புகழ்நிலை நிறுத்தித் தந்த
மன்னவ ருசைதென் றோதி
மார்புறத் தழீஇயி னாரே.
53
(இ-ள்) அவ்வாறு
கட்டிச் சேர்ந்த அவர் அசுஅ தென்பவரை எனது பிராணனை யொத்த சோதரனே! உன்னை யான்
துக்கத்தினது கொலைத் தொழிலைச் செய்வதற்குக் கருதினே னென்று முன்னாலுறைந்து இரண்டு கண்களிலு
மிருந்து மழையைப் போலும் நீரானது சிந்தும் வண்ணங் கூறித் தமயனாகியவரின் அழகிய பாதங்களிற்
பணிந்து இந்தக் கீர்த்தியினது நிலைபரத்தை நாட்டித் தந்த அரச ரானவர் உசை தென்று புகன்று
அவரை நெஞ்சினிடத்துப் பொருந்தும்படி கட்டி யணைத்தார்.
கலி விருத்தம்
2399.
முசுயிபை யசுஅதென் றுயர்முன்
னோனையு
முசைதையுந் தணப்பிலா துவந்து
கொண்டுசென்
றசைதருங் கொடிமறு ககன்று
மாறடர்ந்
திசைதரும் வேலினார் மனையி
னேகினார்.
54
(இ-ள்) பகையை
யுடைய சத்துராதிகளைப் பொருதிச் செயித்துக் கீர்த்தியைக் கொடுக்கா நிற்கும்
வேலாயுதத்தையுடைய அந்தச் சஃதென்பவர் முசுயிபையும் அசுஅ தென்று கூறு மபிதானத்தோ டோங்கா
நிற்குந் தமது தமையனையும் உசை தென்பவரையும் பிரியாது விரும்பித் தன்னோடு கூட்டிக் கொண்டு
போய் ஆடுகின்ற துவசங்களையுடைய தெருக்களை விட்டு நீங்கி வீட்டினிடத்துச் சென்றார்.
2400.
மன்னிய செழுங்கதிர் மாடத்
துட்கொடு
மின்னிய தவிசினி லேற்றி
வீரத்தின்
முன்னிய மூவரு முவப்ப மூரலிட்
டின்னறைப் பாகொடு மினிதி
னூட்டினார்.
55
(இ-ள்) நிலைபெற்ற
செழிய பிரகாசத்தை யுடைய வீட்டினகம் அவ்வாறு கொண்டு சென்று ஒள்ளிய ஆசனத்தின்கண் அவர்களை
ஏறியிருக்கும்படி செய்து வல்லமையினாலோங்கிய அம் மூவர்களும் மகிழும் வண்ணம் இனிமையுடன் இனிய
வாசனையை யுடைய பாலோடு அன்னமிட்டுண்ணச் செய்தார்.
2401.
வெள்ளிலை யரிபிள வீய்ந்து
மேலவ
ருள்ளம துவப்புற வுழையி
னோர்மனக்
கள்ளம தறக்கலி மாவை
நாவினின்
விள்ளுதல் படுத்தித்தீன்
விளக்கு வேனென்றார்.
56
|