பக்கம் எண் :

சீறாப்புராணம்

893


இரண்டாம் பாகம்
 

2405. இத்தலத் தலைவரி னெவர்க்கு நாயக

     வுத்தமக் கிளைக்கெலா முயிரின் மிக்கெனப்

     பத்தியிற் கொண்டனம் பகர்வ தென்னுளப்

     புத்தியிற் றெளியுநீ ரெனப் புகன்றனர்.

60

      (இ-ள்) இந்தத் திரு மதீனமா நகரத்தினது தலைமைத் தனத்தையுடையவர்க ளியாவருக்கும் நாயகமான சஃதென்பவரே! யாங்கள் நும்மை மேலான நமது பந்து ஜனங்களுக்கெல்லாம் பிராணனைப் பார்க்கிலும் மேலென்று எங்களது விசுவாசத்திற் கொண்டிருக்கின்றோம். வேறே கூறுவது யாது? ஒன்றுமில்லை. இதை நீவிர் உமது இதய அறிவினால் விளங்கிக் கொள்ளு மென்று சொன்னார்கள்.

 

2406. உறமுறைக் கிளைஞர்க ளொருப்பட் டியாவரும்

     பெறுமொழி யிறுதியிற் பேசி னாரிவை

     மறைபகர் முகம்மதின் பறக்கத் தாலெனத்

     திறனுறுங் கருத்தினிற் சிந்தித் தாரரோ.

61

      (இ-ள்) அவர்கள் அவ்விதஞ் சொல்ல சஃதென்பவர் பந்தத்துவத்தினது ஒழுங்கையுடைய நமது கூட்டத்தார்க ளியாவரும் ஒரு மனப்பட்டு நாம் பெறத்தக்க வார்தையை முடிவாகக் கூறினார்கள். இந்த வார்த்தைகளைக் கூறினது வேதங்கள் புகலா நிற்கும் நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பறக்கத்தினா லென்று தம் முறுதி பொருந்திய இதயத்தின்கண் எண்ணினார்.

 

2407. பெருக்கிய கிளையவ ரெவரும் பெட்புறத்

     திருக்கிளர் நபிகலி மாவைத் தேர்ந்தெடுத்

     துரைக்கிலீ ரெனிலும துறவுக் குண்மையுற்

     றிருக்கில னியானென வெடுத்துக் கூறினார்.

62

      (இ-ள்) அவ்வா றெண்ணிய அவர் யானிப்போது கூட்டிய பந்துக்களாகிய நீங்க ளியாவரும் அன்பு பொருந்தத் தெய்வீக மோங்கிய நாயகம் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசுல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் கலிமாவைத் தெளிந்து எடுத்துக் கூறா திருப்பீர்களே யானால் யான் உங்களது பநத்துவத்திற்குச் சத்தியமா யிரேனென்று எடுத்துச் சொன்னார்.

 

2408. இத்தகை யெவரெடுத் தியம்பு வாருமக்

     கொத்தவை யெமர்களுக் கொத்த செல்வமே

     வித்தக விவ்வுரை வெறுத்திட் டோமெனிற்

     பித்தரென் றுலகினிற் பேச வேண்டுமே.

63