பக்கம் எண் :

சீறாப்புராணம்

894


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவர் அவ்விதஞ் சொல்ல, பந்து ஜனங்கள் அறிவினையுடைய சஃதென்பவரே! இப்படிப்பட்ட மேன்மையை எங்களுக் கெடுத்துக் கூறுவார் யாவர்? வேறொருவரு மில்லர். நுமக்குப் பொருந்தியவை எம் மவர்க்கும் பொருந்திய பாக்கியமே யாகும், யாங்கள் இவ்வார்த்தைகளைத் தள்ளினோ மாயின் எங்களை இவ் வுலகத்தின்கண் பைத்தியக்காரர்களென்று சொல்லல் வேண்டும்.

 

2409. என்றுரைத் தினியன புகன்று நன்னபி

     மன்றலம் புகழ்பெறும் புதுமை வாழ்த்தியே

     யொன்றிய திருக்கலி மாவை யோதியே

     பொன்றிலாத் தீனிலைப் பொருந்தி னாரரோ.

64

     (இ-ள்) என்று சொல்லி அவர்கள் இனிமையான வார்த்தைகளைப் புகன்று பரிமளத்தைத் தரும் அழகிய நன்மை பொருந்திய நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் கீர்த்தியைப் பெறா நிற்கும் அற்புதங்களைத் துதித்து ஒன்று பட்ட தெய்வீகத்தை யுடைய ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவைச் சொல்லிக் கெடாத தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையிற் சார்ந்தார்கள்.

 

2410. கனம்பயில் கொடைக்கரன் சகுது கல்பினி

     லுனும்பொருள் குறித்துநல் லுணர்வு பெற்றிடுஞ்

     சனம்பல ரெவரவர் தமக்கன் சாரிக

     ளெனும்பெய ருலகெலா மிலங்க நின்றதே.

65

      (இ-ள்) மேகத்தைப் போலு முதாரத் தொழிலிற் பழகிய கைகளையுடைய அந்த சஃதென்பவர் தமது இதயத்தின்கண் சிந்தித்த உண்மையைக் கருதி நன்மை பொருந்திய அறிவினையடைந்த பலவாகிய சனங்கள் யாவரோ?அவர்களுக்கு அன்சாரிகளென்று சொல்லும் அபிதான மானது எல்லா வுலகங்களிலும் பிரகாசிக்கும்படி நிலை பெற்றது.