பக்கம் எண் :

சீறாப்புராணம்

899


இரண்டாம் பாகம்
 

     (இ-ள்) அன்று முதல் நெருங்கித் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்க நிலைமையிற் பொருந்திய பெரியவர்களின் நன்னடத்தையையும், செயலையும் அன்பையும் தொழுகையையும் நாளுக்கு நாள் விஜயத்தைக் கொண்ட நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் நேசித்து உங்களிடத்தில் விருப்ப முற்றார்கள்.

 

     2425. மருப்பொதி துடவைசூழ் மதீன மன்னவர்

          விருப்பொடுந் தம்மன விருப்பும் வேறிலா

          தொருப்பட வுயிர்த்துணை யுடைய ராக்குடி

          யிருப்பது கருத்தில்வைத் திருத் தினாரரோ.

15

      (இ-ள்) வாசனையினது பூவரும்பினை யுடைய சோலைகள் சூழ்ந்த திரு மதீனமா நகரத் தரசர்களினது பிரியத்தோடும் தங்கள் மனப் பிரியத்தையும் பிறிதாகாம லொன்றுபடும் வண்ணம் ஒருவர்க்கொருவர் பிராணனைப் போலு முதவி யுடையவராகக் குடியிருப்பதை மனதின்கண் வைத்திருக்கும்படி செய்தார்கள்.

 

     2426. திருநபி முகம்மதுந் திருந்த நும்முழை

         வருவது சரதமம் மதீனந் தன்னினுங்

         கருதல ருளருறுங் கருத்தின் பெற்றியை

         விரிதர வறிகிலன் விளம்ப வேண்டுமால்.

16

      (இ-ள்) தெய்வீகத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் செவ்வையாகிய உங்களிடத்தில் வந்து விடுவது சத்தியம். அந்தத் திரு மதீனமா நகரின் கண்ணும் சத்துராதிகளுள்ளனர். ஆதலால் பொருந்திய உங்கள் நினைப்பினது தன்மையை இன்னதென்று யான் தெரிந்திலேன். அதை நீங்கள் விரிவாகக் கூறுதல் வேண்டும்.

 

2427. இன்னவை யனைத்தையு மெடுத்தப் பாசெனு

     மன்னவ ருரைத்தலு மதீன மாகிய

     நன்னகர்த் தலைவர்கள் கேட்டு நன்கெனச்

     சென்னிக டுயல்வரச் செப்பு வாரரோ.

17

      (இ-ள்) இப்படிப் பட்டவைக ளெல்லாவற்றையும் அந்த அப்பா சென்று கூறும் அபிதானத்தை யுடைய அரசர் எடுத்துச் சொன்ன மாத்திரத்தில் திரு மதீன மாகிய நன்மை பொருந்திய பட்டணத்தினது தலைமைத் தனத்தையுடையவர்களான அவர்கள் காதுகளினாற் கேள்வியுற்று நல்லதென்று தலைகளசையும் வண்ணம் சொல்லுவார்கள்.