பக்கம் எண் :

சீறாப்புராணம்

906


இரண்டாம் பாகம்
 

வார்த்தைப் பாட்டை யுடையவர்கள் ஓர் நல்லொழுக்கமு மில்லாத தாழ்வை யுடையவர்களென்று வேத நூற்களிலும் உலக வழக்கத்திலும் பேசப் படுகின்றன.

 

2449. ஈதுமுத் திரையும் திதயத் தெண்ணியத்

     தீதறு மாமறைச் செவ்வி யோர்களி

     லேதமிற் றலைவர்பன் னிருவ ரைத்தெரிந்

     தாதரத் தொடுமிவ ணடைக வென்றனர்.

39

      (இ-ள்) இவ் வார்த்தைகளை நீங்கள்  முத்திரைச் சீட்டென்று உங்களது மனத்தினிடத்துச் சிந்தித்து அன்போடும் குற்றமற்ற அந்த மகத்தான புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது செவ்வியையுடையோர்களில் களங்கமில்லாத தலைமைத் தனத்தையுடையவர்களான பன்னிரண்டு பேர்களைத் தெரிந்து கூட்டிக் கொண்டு இவ்விடத்தில் வந்து சேருங்களென்று சொன்னார்கள்.

 

2450. மல்வளர் புயமுகம் மதுதம் வாய்மொழிக்

     கல்பினி லிருத்திநன் கென்னக் காவலர்

     நல்வளம் பொருந்திய மதீன நன்னகர்ச்

     செல்வர்தம் முழையிவை யெடுத்துச் செப்பினார்.

40

      (இ-ள்) வல்லமை யோங்கா நிற்கும் தோள்களை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் வாயினால் அவ்வா றுண்டான வார்த்தைகளை அரசர்களாகிய அவர்கள் தங்களின் னிதயத்தின் கண்ணிருக்கும்படி செய்து நல்லதென்று நன்மையையுடைய செல்வமானது பொருந்தப் பெற்ற திரு மதீன மென்னும் நல்ல நகரத்தினது செல்வர்களிடத்து இச் சமாச்சாரங்களை எடுத்துச் சொன்னார்கள்.

 

கலிநிலைத் துறை

 

2451. கேட்ட மன்னவ ரனைவருங் கிளரொளி வனப்பிற்

     பூட்டு வார்சிலை வீரத்திற் குறைவறாப் பொருளின்

     வாட்ட மின்றிய கசுறசு வங்கிஷத் தவர்கள்

     கூட்டத் தாரினி லொன்பது பெயரினைக் குறித்தார்.

41

      (இ-ள்) அச் சமாச்சாரங்களைக் காதுகளினாற் கேள்வியுற்ற அரசர்களாகியத் திரு மதீனமா நகரத்தோர்க ளியாவரும் ஓங்கா நிற்கும் பிரகாசத்தையுடைய அழகிலும், வளைத்து நாணைப் பூட்டுகின்ற நீண்ட கோதண்டத்தின் வல்லமையிலும், வற்றுத லற்ற செல்வத்திலும், குறைவில்லாத கசுறஜூக் கிளையார்களின் கூட்டக்காரரில் நின்றும் ஒன்பது பெயரை நியமித்தார்கள்.