பக்கம் எண் :

சீறாப்புராணம்

908


இரண்டாம் பாகம்
 

2455. மாறி லாதும திருகுலத் தினிற்சிலர் மறுத்து

     வேறு கூறினு மிந்நகர்க் குறைசிகள் வெகுண்டு

     சீறி னுமறு புறநகர்ப் படைதிரண் டிடினுந்

     தூறு தோன்றியின் பறப்பெருந் துன்பமே வரினும்.

45

      (இ-ள்) உமது கசுறஜூ, அவுசென்னுமிரு வங்கிடத்தார்களிற் சில பேர்கள் மாறாது மறுதலித்து வேறான வார்த்தைகளைப் பேசினாலும், இந்த மக்கமா நகரத்தின் கண்ணுள்ள குறைஷிக் கூட்டத்தார்கள் கோபித்து அதட்டினாலும், மற்ற இதரத் தேசங்களினது சேனைகளெல்லாம் ஒன்று கூடினாலும், பழிச் சொற்க ளுண்டாய் இனிமையான தற்றுப் போகும் வண்ணம் பெரிய வருத்தங்கள் வந்தாலும்.

 

2456. படைக்க லத்திரை யெறிந்தெதிர் வரும்பகைக் கடலைக்

     கடக்கும் வேல்வல னேந்திய செழுந்தடங் கரத்தீ

     ருடற்கு ளாவியொத் திப்பதிற் றிருவர்க ளுரைக்கீழ்

     நடக்க வேண்டுமென் றுரைத்தனர் நபிகணா யகமே.

46

      (இ-ள்) ஆயுதங்க ளாகிய அலைகளை வீசிக் கொண்டு முன்னால் வரும் சத்துராதிகளான சேனா சமுத்திரத்தை ஜெயிக்கா நிற்கும் வேலாயுதத்தை வலக் கரத்தில் தாங்கிய செழுமை பொருந்திய பெரிய கைகளை யுடையவர்களே! நீங்கள் சரீரத்தினகத் துள்ள பிராணனைப் போன்று கசுறஜீ, அவுசென்னு மிரு கிளையிலு முள்ள இந்தப் பன்னிரண்டு பேர்களினது வார்த்தைகளுக்குள் அடங்கி நடக்க வேண்டு மென்று நபிகட் பெருமானான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் கற்பித்தார்கள்.

 

2457. புகலு நன்மொழி யனைத்தையு மனத்துறப் பொருத்தி

     யிகல றத்தெளிந் தாய்ந்துசீர் தூக்கியிந் நிலத்திற்

     பகரு மிம்மொழிக் கீறிலை யெனநிலை படுத்தி

     மகித லம்புகழ் மதீனமன் னவர்கள்சம் மதித்தார்.

47

      (இ-ள்) அவ்விதங் கற்பித்த நன்மை பொருந்திய அந்த வார்த்தைகளெல்லாவற்றையும் இவ்வுலகமானது துதிக்கா நிற்கும் திரு மதீனமா நகரத் தரசர்களான அவர்கள் இருதயத்தின்கண் பொருந்தும் வண்ணஞ் சேர்ந்து விரோத மற விளங்கி ஆராய்ந்து ஒத்துப் பார்த்து இந்தப் பூமியின்கண் கூறிய இவ் வார்த்தைகளுக்கு முடிவில்லை யென்று திடப்படுத்தி யுடன்பட்டார்கள்.

 

2458. முத்த வெண்கதிர் முகம்மதே முனிவிலாத் திருவா

     யுத்த ரத்தினி லறிவுபெற் றனமுளந் ததும்பப்

     புத்தி பெற்றனம் பெருகிய கதிபெறும் பொருட்டா

     யித்த லத்தெமக் கியம்புவ தியம்புமென் றிசைத்தார்.

48