பக்கம் எண் :

சீறாப்புராணம்

909


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வா றுடன்பட்ட அவர்கள் முத்தினது வடிவாயிருந்த வெள்ளிய பிரகாசத்தைக் கொண்ட முகம்மதென்னுந் திருநாமத்தையுடைய நபிகட் பெருமானே! யாங்கள் உங்களது கோப மற்ற தெய்வீகந் தங்கிய வாயினது உத்திரவினால் அறிவையடைந்தோம். இதயமானது நிறையும் வண்ணம் போதனையை யடைந்தோம். அதிகரித்த மோட்சத்தைப் பெறா நிற்கும் காரணத்தினால் எங்களுக்கு இந்தப் பூமியினிடத்து இனிக் கூறுவதைக் கூறுங்க ளென்று கேட்டார்கள்.

 

2459. அந்த வேளையி லருளுடை யமரருக் கரச

     னிந்த மாநிலத் தரசெனு முகம்மதி னிடத்திற்

     சிந்தை கூர்தர வாதிதன் றிருசலா முரைத்து

     வந்தி ருந்தனர் பிறரவ ரறிகிலா வண்ணம்.

49

     (இ-ள்) அந்தச் சமயத்தில் காருண்ணியத்தையுடைய தேவர்கட்கதிபரான ஜிபுரீயீ லலைகிஸ்ஸலா மவர்கள் இதர ஜனங்களொருவருந் தங்களைக் காணாதபடி இந்த மகத்தாகிய பூலோக முழுவதுக்கும் மன்னவரென்று கூறா நிற்கும் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களிடத்தில் வந்து அவர்களின் மனமானது மகிழ்ச்சியடையும் வண்ணம் யாவற்றிற்கும் முதன்மைய னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய சலாமைக் கூறிப் பக்கத்திலுட்கார்ந்தார்கள்.

 

2460. இறைவன் றூதுவ வெனதுயிர்த் துணைவவிவ் விரவே

     யறிவி னாலுயர் மதனியர் தம்மகத் துண்மை

     யுறைய வாய்மையிற் பெறுகவொவ் வொருவர்பா லொழுங்கா

     முறையி வர்க்குப்பி னிவரென மொழிந்துவிண் போனார்.

50

      (இ-ள்) அவ்வா றுட்கார்ந்து இறைவனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் றசூலாகிய நபிகட் பெருமானே! எனது பிராணனை நிகர்த்த துணைவரே! இந்த இரவிற் றானே அறிவினா லோங்கிய திருமதீனமா நகரத்தை யுடையவர்களி னிதயத்தின்கண் சத்திய மானது தங்கும் வண்ணம் அவர்கள் ஒவ்வொருவரிடத்திலு முறையாக உறுதி வார்த்தை பெறுவீராக, அவ்விதம் பெறும் ஒழுங்கானது இன்னார்க்குப் பின்னர் இன்னா ரென்று சொல்லி விட்டு வான லோகத்தின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2461. அவிரொ ளிச்சிறைச் சபுறயீ லருளுரைப் படியே

     தவிசின் மீதிருந் தவரவர் வரன்முறை தவறா

     தெவரும் புந்தியின் மகிழ்வுற வலக்கர மீந்து

     செவிகு ளிர்ந்தநன் மொழியொடு மறுதிசெய் கென்றார்.

51