பக்கம் எண் :

சீறாப்புராணம்

933


இரண்டாம் பாகம்
 

அப்பழியைக் கொடுப்பவர்களியாவர்? இஃது செவ்வையையுடைய மார்க்கமே யல்லாமல் பிறிதில்லை யென்று எல்லாருக்குந் தெரியும் வண்ணம் கூறினான்.

 

2525. அபுசகு லுரைத்த மொழிவழி துணிந்தங்

          ககங்குளிர்ந் தனரனை வோரும்

     புவியினி லெவர்நின் சூழ்ச்சியை நிகர்ப்ப

          ரெனப்புகழ்ந் திருந்திபு லீசு

     குவிகுலத் தெவர்க்குங் குறிப்பிவை யலது

          வேறிலை முகம்மதைக் குறுகிச்

     சவிமதிண் மதீனா புகுமுனம் விரைந்தித்

          தந்திர முடித்திடு மென்றான்.

60

      (இ-ள்) அந்த அபூஜகி லென்பவன் அவ்வாறு கூறிய சமாச்சாரத்தினது முறைமையால் அந்தச் சபையின் கண்ணிருந்த யாவர்களும் இவ்விதஞ் செய்யலா மென்று திடன் கொண்டு மனமானது குளிரப் பெற்றார்கள். இபுலீசு லகுனத் துல்லா வென்பவன் அவனை இந்தப் பூமியின் கண் உனது ஆலோசனையை நிகர்த்துக் கூறுவார் யாவர்? என்று சொல்லித் துதித்து அவ்விடத்தி லுறைந்து அங்கு வந்து கூடியிருந்த கூட்டத்தாரனைவர்களுக்கும் இப்போது இந்த அபூஜகில் சொல்லிய இவ் வார்த்தைகளே நாம் கருதத் தகுவன, அல்லாமற் கருதத் தகுந்தவைகள் பிறிதொன்றுமில்லை. நீங்கள் அந்த முகம்மதென்பவனைச் சமீபத்து அவன் பிரகாசத்தைக் கொண்ட கோட்டை மதில்களை யுடைய திருமதீனமா நகரத்தின் கண் போய்ச் சேரு முன்னர் விரைவாய் இந்த உபாயத்தை நிறைவேற்றி விடுங்களென்று சொன்னான்.

 

2526. இன்னவா றலது வேறொரு குறிப்பு

         மிலையெனச் சம்மதித் தெழுந்து

     மன்னிய காபிர் மனையிடம் புகுத

         வரமுறும் வானவர்க் கிறைவர்

     பன்னருங் கிரணச் சிறைபல வொடுக்கிப்

         படரிரு விசும்பினின் றிழிந்து

     நன்னபி யிறசூல் முகம்மதி னிடத்தி

         னண்பொடு சலாமுரைத் துறைந்தார்.

61

      (இ-ள்) அவன் அவ்விதஞ் சொல்ல, அந்தச் சபையின் கண் தங்கியிருந்த காபிர்களியாவரும் அந்த முகம்ம தென்பவனைக் கொல்லுதற்கு இந்த மார்க்கமே யல்லாமல் பிறிதொரு சிந்தனையு மில்லை யென்று சொல்லி அக் கருத்திற்குத் தாங்களு முடன்பட்டு எழும்பித் தங்கள் தங்கள் வீட்டின் கண் போய்ச் சேர,