பக்கம் எண் :

சீறாப்புராணம்

946


இரண்டாம் பாகம்
 

பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து நாம் சத்துராதிகளாகிய அந்தக் காபிர்கள் அறியாத மார்க்கத்தில் சீக்கிரமாய்ப் போய்ச் சேருதல் வேண்டும். அதற்குப் பொருந்திய வாகனங்க ளொன்றும் நம்மிடத்திலில்லை நாமிருவரும் ஏகமாய்ப் பெரிய கானகத்தைத் தாண்டுவது நம திறைய னான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவின் பார மென்று சொல்ல, அதற்கு அவ் வபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்கள் எடுத்துக் கூறுவார்கள்.

 

2551. உரத்தின் வலியிற் சுமைக்கிளையா

          தொட்டை யிரண்டென் னிடத்தினுள

     பரித்தற் குமக்கொன் றியானளித்தே

          னென்றார் நபியும் பரிவினொடும்

     பொருத்துங் கிறையம் பொருத்தியெமக்

          கருளு மெனுஞ்சொற் புகலமனத்

     திருத்தி யிஃதே நெறிமுறையென்

          றிணங்கி விரையிற் கொடுத்தனரால்.

86

      (இ-ள்) வேகத்திலும் வலிமையிலும் பாரத்திற்குத் தளராத இரண்டொட்டகங்கள் என்னிடத் துள்ளன. அவற்றி லொன்றைத் தங்களுக்கு ஏறி இருந்து செல்லுவதற்கு யான் இனாமாகத் தருகிறேனென்றார்கள். அதற்கு நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அன்போடும் நீவிர் அதற்குப் பொருந்தா நிற்கும் விலையை இன்னதென்று பொருந்தச் சொல்லி எமக்குத் தாருமென்னும் வார்த்தையைக் கூற, அவ் வார்த்தைகளை அந்த அபூபக்கர் சித்தீகுறலி யல்லாகு அன்கு அவர்கள் இதயத்தின் கண்ணிருக்கும்படி செய்து இதுவே ஒழுங்கான முறைமை யென்று அவ் வார்த்தைகளுக்குச் சம்மதித்து விரைவில் அவ்வாறு விலையாகக் கொடுத்தார்கள்.

 

2552. இருவர் மனமும் பொருந்தவரு

          மிளவ லொருவன் றனையழைத்துத்

     தெரிய நெறிக்கூ லியுமளித்தொட்

          டகமு மவன்ற னிடஞ்சேர்த்தி

     முருகு துளிக்குந் தௌறுமலைப்

          பொதும்பிற் றினமூன் றகன்றதற்பின்

     விரைவி னாலாந் தினத்திரவின்

          வாவென் றிவையும் விளம்பினரால்.

87